விலைவாசி-வீட்டுக்கு ரூ.500 தர தேமுதிக கோரிக்கை
அரக்கோணம்: விலைவாசியை சமாளிக்க வீட்டுக்கு ரூ.500 ஏன் கொடுக்க கூடாது என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் தேமுதிக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் பேசுகையில், நடிக்கத் தெரிந்தவருக்கு நாடாள தெரியுமா? ஏன் இந்த வீண் முயற்சி? என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி விமர்சிக்கப்படுபவர், தேர்தலில் தனித்து போட்டியிடுவேன் என்று தைரியமாக சொல்கிறார். அரசியல் விற்பன்னர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் மட்டும் ஏன் 8, 9 கட்சிகளின் கூட்டணியை ஏற்படுத்துகிறார்கள்.
வீட்டுக்கு காட்டிய அக்கறையை நாட்டுக்கு காட்டாதவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். இவர்களின் ஆட்சியை பார்த்து சலித்து நல்லவரை தேடும் மக்கள்தான் இன்றைக்கு விஜயகாந்தை ஆதரிக்கிறார்கள். இன்றைக்கு விலைவாசி உயர்வால் மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் யார்?
விலைவாசி உயரும்போது, அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயருகிறது. ஆனால் ஏழைகள் கதி என்னாவது? மாதந்தோறும் வீட்டுக்கு ரூ.500 ஏன் கொடுக்கக் கூடாது? இதற்கு டாஸ்மாக் வருமானத்தில் ஒரு பங்கை கொடுத்தாலே போதுமே என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications