சமாஜ்வாடி பொதுச் செயலாளர் ஷாஹித் சித்திக்கி பகுஜனுக்கு தாவினார்

காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு தெரிவித்தபோது அதன் வசம் இருந்த 39 எம்.பிக்களும் காங்கிரஸுக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி போய் விட்டது.
ஆரம்பத்தில் ஒவ்வொரு எம்.பியாக கட்சி முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து வந்தனர். இன்று நான்காவது எம்.பி வெளிப்படையாக தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். நேற்று நடந்த நாடாளுமன்ற சமாஜ்வாடி கட்சிக் கூட்டத்திற்கு வெறும் 16 எம்.பிக்களே வந்திருந்து முலாயம் சிங்கையும், அமர்சிங்கையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
இந்த நிலையில் இன்று சமாஜ்வாடிக் கட்சி கிட்டத்தட்ட உடைந்தே விட்டது. அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா கட்சி தலைவரும், பொதுச் செயலாளருமான ஷாஹித் சித்திக்கி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் மாயாவதியும், சித்திக்கியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சித்திக்கி கூறுகையில், எனது மனசாட்சிப்படி முடிவு செய்துள்ளேன். பேரம் பேசி நான் மாயாவதியிடம் வரவில்லை.
எங்களது ஓட்டுக்களை சமாஜ்வாடியும், காங்கிரஸும் பயன்படுத்திக் கொண்டன. எங்களையம் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் எங்களுக்குரிய அங்கீகாரத்தை மட்டும் கொடுக்கத் தவறி விட்டனர்.
நான் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளேன். மாயாவதி தலைமையில், தலித்கள், முஸ்லீம்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடப் போகிறேன்.
அணு சக்தி ஒப்பந்தம் தேச நலனுக்கு விரோதமானது, முஸ்லீம்களுக்கு விரோதமானது என்றார் சித்திக்கி.
சித்திக்கியைத் தொடர்ந்து பல எம்.பிக்கள் விரைவில் மாயாவதியை சந்தித்து பகுஜன் சமாஜ் கட்சிக்கு முறைப்படி தாவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சமாஜ்வாடி கட்சியும், காங்கிரஸும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன.












Click it and Unblock the Notifications