திமுகவின் உண்ணாவிரதம் மீனவர்களை ஏமாற்றும் நாடகம்: ராமதாஸ்
சென்னை: கச்சத்தீவு பிரச்னையை தீர்க்கும் அதிகார வாய்ப்புகள் இருந்த காலத்தில் எதையும் செய்யாமல் இப்போது உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தி முதல்வர் கருணாநிதி மீனவர்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 1974ல் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததுதான் இப்போதைய பிரச்னைக்கு முதற்காரணம். அப்போது கருணாநிதி தலைமையிலான திமுகதான் ஆட்சியில் இருந்தது.
அதன்பிறகு 3 முறை முதல்வராக பொறுப்பு வகித்த நேரங்களில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகளை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய ஆட்சியில் பங்கு வகித்த முக்கிய கட்சியாக இருந்த போதிலும் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு இப்போது தும்பைவிட்டு வாலை பிடிக்கும் கதையாக உண்ணாவிரதம் என்ற நாடகம் ஆடுவது யாரை ஏமாற்றுவதற்காக?
உண்ணாவிரதம் இருப்பது தவறல்ல. ஆனால் மீனவர் பிரச்னைக்கு டெல்லியில்தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமே தவிர, தமிழகத்தில் அல்ல. டெல்லியில் இருந்து தங்கி வாதாட வேண்டும். கடலில் இந்திய மீனவர்களின் உயிருக்கு இலங்கை கடற்படையால் ஊறு நேர்ந்தால் இந்திய அரசு வேடிக்கை பார்க்காது என்று எச்சரிக்குமாறு வற்புறுத்த வேண்டும்.
இந்த உத்தரவாதம் கிடைக்கும் வரை சென்னை திரும்ப மாட்டேன் என்று அங்கேயே இருந்து சாதித்துக் காட்ட வேண்டும். இதற்கு மாறாக இங்கே உண்ணாவிரதம் என்று நாடகமாடுவது மீனவர்களை ஏமாற்ற மேற்கொள்ளும் முயற்சி.
ஆட்சியில் இருந்தபோது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது, சுதந்திர நாளில் கோட்டையில் கொடுயேற்றி வீர முழக்கம் செய்தது, பிரதமர்களுக்கு அவ்வபோது கடிதங்கள் எழுதியது ஆகியவற்றை தவிர உருப்படியான பயனுள்ள நடவடிக்கை எதையும் முதல்வர் செய்யவில்லை.
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் எதிரிகள், வேண்டாதவர்கள் என கருதப்படும் அதிகாரிகளையும் பழிவாங்குவதில் காட்டும் வேகத்தில் நூறில் ஒரு பங்கு வேகத்தையாவது, கோபத்தையாவது கச்சத்தீவு பிரச்னையில் காட்டி செயல்பட்டிருந்தால் இப்பிரச்னைக்கு எப்போதோ தீர்வு ஏற்பட்டிருக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியே நாடகம் ஆடுவதா?: ஓ.பி
இதேபோலஅதிமுகவும் திமுக உண்ணாவிரதத்ைத நாடகம் என்று வர்ணித்துள்ளது.
ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். துப்பாக்கி சூட்டுக்கு பலியான மீனவர்களின் குடும்பங்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் அல்லாடுகின்றனர்.
இதுபற்றி சிறிதும் கவலைப்படாமல் மத்திய அரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும் இருந்து கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது திமுக. ஆளும் கட்சியினரே உண்ணாவிரதம் இருப்பது வருந்தத்தக்கது.
மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பது உண்மையானால், மத்திய அரசுடன் கூட்டணி வைத்திருப்பதை கருணாநிதி உடனே தவிர்க்க வேண்டும். கருணாநிதி ராஜினாமா செய்வதை விட்டுவிட்டு தமிழக மக்களையும் மீனவர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். அவரது ஆட்சியில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
ஜூலை 22ம் தேதி நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு கவிழ்ந்து, அதன் பிறகு உள்ளாட்சி மன்றங்கள் கலைக்கப்படும். மைனாரிட்டி அரசான திமுக அரசின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றனர் என்றார் பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications