தலைநகர் கொலைநகராகி விட்டதா? - சரத்குமார் கண்டனம்
சென்னை: ஒரு மாதத்திற்குள் 8 கொலைகள் நடந்திருப்பது தலைநகர் சென்னை, கொலைநகராகி விட்டதோ என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஒரு மாத காலத்திற்குள் வடபழனி, மாம்பலம், போரூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் சங்கிலிக் கோர்வையாக எட்டு பேர் மர்மமான முறையில் அடித்தும், எரித்தும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் எட்டு கொலைகள் அரங்கேற்றப்பட்டும், இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியாதது மட்டுமல்லாமல், குற்றவாளி யார் என அடையாளம் காணவும் முடியாது, தொடர் கொலைகளை தடுக்கவும் இயலாது தலைநகர காவல்துறை தடுமாறுவது கண்டு சென்னை வாழ் மக்கள் பீதியும் அச்சமும் அடைந்துள்ளனர்.
எட்டு கொலைகளிலும் ஒரே நபர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளதால் இரண்டு கொலைகளுக்கு காரணமானவர்கள் என காவல் துறை கைது செய்த ஏகாம்பரம் என்னும் மனநோயாளி உண்மை குற்றவாளி இல்லையோ என்ற ஐயமும் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கு சாட்சியாக இருப்பது தலைநகரத்தில் நிலவும் அமைதியும் குற்ற நிகழ்வுகளின் குறைவான எண்ணிக்கையும்தான். அப்படி இருக்கும் போது தொடர் கொலை சம்பவங்களும் கடும் குற்றங்களும் பெருகி வருவது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைகிறது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் உறவினர் ஒருவரது கொலையிலும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடந்து விட்ட எட்டு மர்ம கொலைகளிலும் துப்பு துலக்க முடியவில்லை.
முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லிட வந்துவிட்டு வீடு திரும்பாது, படப்பை அருகில் உள்ள மணிமங்கலத்தில் சாக்கு மூட்டையினுள் கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஆளுங்கட்சியின் மகளிரணி பிரமுகர் பால்மலர் என்பவரது கொலையிலும் இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை.
இப்படி நீளும் பட்டியலைப் பார்த்தால் குற்றவாளிகளின் புத்திசாலித்தனம் கூடியிருக்கிற அளவுக்கு தமிழக காவல்துறையின் புலனாய்வுத் திறமை அதிகரிக்கவில்லையோ என்று ஆதங்கமும் கவலையுமே ஏற்படுகிறது.
அரசியல் குறுக்கீடுகள் ஒருபுறம், அடிக்கடி மேற்கொள்ளப்படும் இடமாறுதல் மறுபுறம் என காவல் துறையின் தொடர் நடவடிக்கைகளை குலைப்பதோடு பதவி உயர்வுகளுக்கும், சுய ஆதாயங்களுக்கும் அரசியலையும், அரசியல்வாதிகளையுமே அதிகமாய் காவல் துறையினர் சுற்றி வரக்கூடிய தவறான நிலையை வெகுகாலமாகவே ஆண்ட, ஆளுகிற கட்சியினர் உருவாக்கி விட்டதின் விளைவே உலக தரத்திற்கு நிகரான தமிழக காவல்துறை பெரும் பின்னடைவையும், சரிவையும் எட்டிட காரணமாகிவிட்டது என்பது உண்மை.
நேற்று ஒரு நாளில் மட்டும் துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பாலியல் குற்றச்சாட்டு பின்னணியில் இடமாற்றம், டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் கூடுதல் டிஜிபி பணியிடை நீக்கம், அதே துறையைச் சார்ந்த மற்றொரு அலுவலக நிர்வாக பிரிவு அதிகாரி கைது எனும் நிகழ்வுகள் காவல்துறையின் கட்டுக் கோப்பு குறைந்து வருகிறது எனும் குற்றச்சாட்டுக்கு சான்றாக அமைகிறது.
இவை எல்லாம் காவல்துறையை களங்கப்படுத்த வேண்டும் என்னும் உள்நோக்கம் என்று எடுத்துக் கொள்ளாமல் தமிழக காவல்துறையை மேலும் நவீனபடுத்துவதோடு நாணயப்படுத்தவும், மனவளப்பயிற்சி வகுப்புகளை காவலர்களுக்கு தொடர்ந்து நடத்தி பாரம்பரியம் மிக்க நமது காவல்துறையின் மாண்புகளை காத்திடவும் தமிழக அரசு முன் வர வேண்டும்.
"கொலை நகரமாக மாறி வருகிறது தலைநகரம்' என்ற அச்சத்தை போக்கும் வண்ணம் குற்றக் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு இத்தொடர் கொலை சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும். ரோந்து மற்றும் உளவுப்பிரிவை வேகப்படுத்தி மக்களிடையே அச்சத்தைப் போக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக குற்றவாளிகளைப் பிடிக்க முழு ஒத்துழைப்பையும், தகவல் பரிமாற்றங்களையும் பொதுமக்கள் காவல் துறைக்கு தந்து உதவ வேண்டும். மீண்டும் சென்னை அமைதி தவழும் மாநகரம் என்ற நிலையை உருவாக்குவதன் மூலமே தலைநகர காவல்துறை இழந்து வரும் தன் பெருமையை நிலைநாட்ட முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications