அமர்சிங் நடத்திய பரேட்-'இதுல யாரு எம்பி'?
டெல்லி: கூட்டமாக பலரை கொண்டு வந்து செய்தியாளர்கள் முன்பு நிறுத்தி, சமாஜ்வாடி எம்.பிக்கள் அப்படியே எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று கூறினார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங். ஆனால் அவர்களில் யார் யார் எம்.பிக்கள் என்பதை அவர் அடையாளம் காட்ட மறுத்து விட்டார்.
சமாஜ்வாடிக் கட்சி சில நாட்களுக்கு முன்பு நடத்திய எம்.பிக்கள் கூட்டத்தில் வெறும் 16 பேரே கலந்து கொண்டனர். மொத்தம் 35 பேர் இருப்பதாக அக்கட்சி கணக்கு கூறுகிறது. ஆனால் வந்ததோ 16 பேர்தான் என்பதால் கட்சி உடைந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின்போது பலரை கூட்டி வந்து எங்களது எம்.பிக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் அமர்சிங்.
ஆனால் பெரும் கூட்டமாக பலர் நின்றதைப் பார்த்துக் குழம்பிய செய்தியாளர்கள், இவர்களில் யார் யார் எம்.பிக்கள் என்று அறிமுகப்படுத்த முடியுமா என்று அமர்சிங்கிடம் கேட்டனர்.
ஆனால் அடையாளம் எல்லாம் காட்ட முடியாது. நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். பத்திரிக்கையாளர்களுக்கு எனது கட்சி எம்.பிக்களை அடையாளம் தெரியாவிட்டால் அது எனக்கு பெரிய அவமானம் என்று கூறி நழுவி விட்டார். கடைசி வரை யார் யார் எம்.பிக்கள் என்பதை அவர் கூறவே இல்லை.












Click it and Unblock the Notifications