மின் உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்தம் அவசியம்-பாலு
டெல்லி: பாஜக உண்மையிலேயே ஏழைகளுக்கு ஆதரவான கட்சியாக இருந்தால் மத்திய அரசின் மீதான இந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு கண்டிப்பாக ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் திமுக சார்பில் பேசிய அவர்,
நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கவும், மின் உற்பத்தியை அதிகரிக்கவும் நமக்கு அணு சக்தி ஒப்பந்தம் மிகவும் அவசியம்.
எந்தவொரு வளரும் நாடும் அணு மின்சாரத்தை இனிமேல் நாடாமல் இருக்க முடியாது. அந்த நிலையில்தான் இந்தியாவும் இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நம்மால் 20 ஆயிரம் மெகாவாட் அணு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இந்த வாய்ப்பை நாம் தவற விட்டால் அணு மின்சார உற்பத்தியில் நம்மால் முன்னேறவே முடியாது. மின் உற்பத்தி இலக்கை எட்டுவதற்கும், அணுசக்தி எரிபொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கும் இந்த ஒப்பந்தம் தேவைப்படுகிறது. நமக்கு அணுசக்தி தொழில்நுட்பம் மறுக்கப்படுவதற்கு இந்த ஒப்பந்தம் முடிவு கட்டும்.
தற்போது இடதுசாரிகளுக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் இடையிலான பிரச்சினை அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பானது. எனவே இது விரைவில் தீர்ந்து விடும். மீண்டும் அரசை ஆதரிக்க இடதுசாரிகள் முன்வரும் என்று நம்புகிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை விட பல வகைகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறந்ததாக உள்ளது. மன்மோகன் சிங் அரசு இதுவரை மண்ணெண்ணை விலையை உயர்த்தவே இல்லை. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மூன்று மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டது.
பாஜக உண்மையிலேயே ஏழைகளுக்கு ஆதரவான கட்சியாக இருந்தால் கண்டிப்பாக நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
மேலும் காங்கிரஸ் கூட்டணி அரசின் கடந்த 4 ஆண்டு சாதனைகளையும் பாலு நீண்ட நேரம் பட்டியலிட்டார்.












Click it and Unblock the Notifications