சார்க் மாநாட்டையொட்டி புலிகள் போர் நிறுத்தம்-அரசு நிராகரிப்பு

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் அரசியல் துறை செயலகம் விடுத்துள்ள அறிக்கை:
பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையொட்டி தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.
சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு ராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை ராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடத்தி வருகின்றது.
சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத் தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.
செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.
உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.
தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை ராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறது.
இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது, அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட எமது இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.
மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், பூட்டான், மாலத்தீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு நிராகரிப்பு:
ஆனால் விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோதபயா ராஜபக்சே கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்ய அரசு தயாராக இல்லை.
போர் முனையில் தாங்கள் பலவீனப்பட்டு வருவதைத் தொடர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த நாடகத்தை அரங்கேற்ற முனைகின்றனர் விடுதலைப் புலிகள். படை பலத்தை பெருக்கிக் கொள்ள இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள முனைகிறார்கள்.
விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.
புலிகளின் அறிவிப்பை நாங்கள் நம்ப வேண்டுமானால் முதலில் அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு விட்டு சரணடைய வேண்டும் என்றார். கோதபயா ராஜபக்சேவின் கருத்து இலங்கை அரசின் வானொலியில் இன்று ஒலிபரப்பப்பட்டது.
இதற்கிடையே, இந்த அறிவிப்பை நார்வே சமரசக் குழு மூலம் புலிகள் வெளியிட்டிருக்க வேண்டும் என இலங்கை அரசின் சமாதான செயலகத்தின் பொதுச் செயலாளர் ராஜீவா விஜயசிங்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு அமைதி வேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம், காத்திருப்போம். உண்மையில் போர் நிறுத்தம் செய்ய புலிகள் விரும்பினால், அதில் தீவிரமாக இருந்தால் நார்வே தூதுக் குழு மூலம் அந்தஅறிவிப்பை அவர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது எங்களிடம் நேரடியாக பேசியிருக்க வேண்டும்.
இதேபோன்ற அறிவிப்புகளை முன்பும் கூட பலமுறை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் அதை பயன்படுத்தி தங்களது படை பலத்தைத்தான் அவர்கள் பெருக்கியுள்ளனர். எனவே புலிகளின் அறிவிப்பு குறித்து நாங்கள் கவனமுடன் இருக்க வேண்டியுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஜெய சிகுரு, ஓயாத அலைகள் 1, 2, 3 ஆகிய தாக்குதல் திட்டங்களை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications