மனநலம் பாதித்தவர் கைது-இன்ஸ்பெக்டருக்கு நீதிபதிகள் கேள்வி
மதுரை: மனநிலை பாதிக்கப்பட்டவரை போலீஸ் காவலில் வைத்திருந்த இன்ஸ்பெக்டரை பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மவுன்டன் வயலைச் சேர்ந்தவர் கருப்பையா. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது மாமனார் வன்னியப்பன் திருப்பூரில் வசித்து வந்தார். அவரது மகன் சரவணனை நெல்லை பாளையங்கோட்டை போலீசார் தேடி வந்தனர். போலீசாருக்கு பயந்து சரவணன் தலைமறைவாக உள்ளார்.
இதனால் அவரது தந்தை வன்னியப்பனை போலீசார் அழைத்துச் சென்று சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். எனவே அவரை விடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
வழக்கு விசாரணனையின் போது கருப்பையா நீதிபதியிடம் எனது மாமனார் வன்னியப்பன் மனநிலை சரியில்லாதவர். ஆனால் அவர் ரூ.50 பிக்பாக்கெட் அடித்தாக கூறி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்று கூறினார்.
இதை கேட்ட நீதிபதிகள் பிரபா தேவன், ஜெயபால் ஆகியோர், வன்னியப்பனை உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
இதனையடுத்து வன்னியப்பனை போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் வன்னியப்பனை விசாரித்தனர். பின்னர், மனநிலை சரியில்லாத ஒருவரை பிக்பாக்கெட் வழக்கில் எப்படி கைது செய்தீர்கள்? எப்படி சட்டவிரோத காவலில் வைத்துள்ளீர்கள்? என்று கேட்டனர். மேலும் இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் பிரபா தேவன், ஜெயபால் ஆகியோர் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கை வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications