கட்சியிலிருந்து சோம்நாத் சாட்டர்ஜி நீக்கம்
சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தொடர்ந்து இடதுசாரிகள் வலியுறுத்தி வந்தன. உச்சகட்டமாக சபாநாயகர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என சோம்நாத் சாட்டர்ஜிக்கு சிபிஎம் மத்திய குழு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் இவையனைத்தையும் நிராகரித்து விட்டார் சோம்நாத் சாட்டர்ஜி. நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
இந் நிலையில் நேற்று நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வெளியே வந்த சோம்நாத்திடம், சிபிஎம் அனுப்பிய நோட்டீஸ் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நான் சிபிஎம் மத்திய குழுவில் உறுப்பினர் இல்லை. எனவே எனக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்ப முடியாது.
ராஜினாமா குறித்து என்னை யாரும் வற்புறுத்த முடியாது. அது சுயமாக எடுக்க வேண்டிய முடிவு என்றார் சோம்நாத் சாட்டர்ஜி.
திடீர் பல்டி:
இதற்கிடையே, தனக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று தான் கூறியதை மறுத்துள்ளார் சோம்நாத்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் பொலிட்பீரோ உறுப்பினர் இல்லை என்று மட்டும்தான் நேற்று என்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தெரிவித்தேன். பொலிட்பீரோவுக்கோ அல்லது மத்திய குழுவுக்கோ எனக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் இல்லை என்று நான் கூறவில்லை.
இன்று நடைபெறும் பொலிட்பீரோ கூட்டம் குறித்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றார் அவர்.
இந் நிலையில் இன்று சோம்நாத் சாட்டர்ஜி விவகாரம் குறித்து கட்சியின் பொலிட்பீரோ கூடி விவாதித்தது. அப்போது சோம்நாத் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
ஆனால், அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வாரா என்று தெரியவில்லை.