அரசு பிழைத்தது-'வியாதி' குணமாகவில்லை-பாஜக!
சென்னை: ஒரு வாரகாலமாக பிழைக்குமா? பிழைக்காதா என்று ஐசியுவில் இருந்த மத்திய அரசு இப்போது தான் பொது வார்டுக்கு வந்துள்ளது. எனினும் வியாதி இன்னும் முழுமையாக குணமாகவில்லை என பாஜக ராஜ்யசபா எம்பியும் அக் கட்சியின் முக்கிய தமிழக தலைவருமான திருநாவுக்கரசர் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் அதன் தோழமை கட்சிகள் விதிமுறை, சட்டம், தர்மத்துக்கு புறம்பாக முறையற்ற செயலில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளன.
இது எண்ணிக்கையின் அடிப்படையில் கிடைத்த வெற்றிதானே தவிர, தார்மீகரீதியில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது.
அதிகார பலம், பண பலத்தை வைத்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு, காங்கிரஸ் இந்த வெற்றியை பெற்றிருந்தாலும் மக்களிடம் நம்பிக்கை இழந்துவிட்டது.
இவர்கள் நடத்திய குதிரை பேரத்திற்கு சாட்சியாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான பணம் கொட்டியது.
மறுவரையறை காரணமாக தொகுதியை இழந்தவர்கள், கட்சியுடன் மனஸ்தாபம் கொண்டிருந்தவர்களையெல்லாம் விலை பேசி, சிலரை வாக்களிகேகவே வரவிடாமல் செய்து, முறையற்ற வெற்றியை பெற்றிருக்கும் இந்த ஆட்சி இன்னும் சில மாதங்களே நீடிக்கும்.
அடுத்த தேர்தலில் பாஜகவே நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் அன்றாடம் செத்து செத்துப் பிழைக்கும் நிலையில் உள்ளனர். சிங்கள கடற்படை நம் எல்லைக்குள்ளேயே வந்து மீனவர்களை சுட்டுக் கொன்று விட்டு அவர்களது உடமைகளை பறித்து சென்று விடுகிறது. இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.
டெல்லி சென்றுள்ள முதல்வர், பிரதமரை வலியுறுத்த வேண்டும். அதிகாரத்தில் உள்ள இவர்களே (திமுக) உண்ணாவிரதம் இருப்பதில் அர்த்தமில்லை.
காங்கிரஸ் அரசு மரணப் படுக்கையில் உள்ளது என்று அத்வானி நகைச்சுவை உணர்வுடன் தான் விமர்சனம் செய்தார். இது தரக்குறைவானதோ, தவறானதோ அல்ல. ஒரு வாரகாலமாக அரசு பிழைக்குமா? பிழைக்காதா என்று செய்திகள் வந்ததால் அவர் அவ்வாறு சொன்னார். இப்போது தான் மத்திய அரசு பொது வார்டுக்கு வந்துள்ளது. எனினும் வியாதி இன்னும் முழுமையாக குணமாகவில்லை.
பாஜக தலைமையை ஏற்று அத்வானியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்துவோம். நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோருடைய கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
தமிழகத்தில் மின்பற்றாக்குறைக்கு ஜெயலலிதாவை குறை சொல்வதில் அர்த்தமில்லை. ஆட்சியில் உள்ள இவர்கள்தான் இதை சரி செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications