வண்டலூர்: ராஜநாகத்தின் 'உண்ணாவிரதம்'!
வண்டலூர்: வண்லூர் உயிரியல் பூங்காவில் ராஜநாகம் ஒன்று 10 நாட்களாகச் சாப்பிடமால் பட்டினி கிடக்கிறது.
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் நல்ல பாம்பு, மலைப் பாம்பு, கட்டு விரியன், இந்திய ராஜநாகம் உள்பட பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன.
இங்கு 16 அடி நீளமுடைய 18 வயதான பெண் இந்திய ராஜநாகம் ஒன்று ஏ.சி. வசதியுடன் கூடிய தனி அறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு சாரைப் பாம்பு, தண்ணீர் பாம்பு போன்றவை உணவாக வழக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக உணவு எதையும் ராஜநாகம் சாப்பிடவில்லை. பட்டினியாகவே இருக்கிறது. இதையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ராஜநாகத்தை முழுமையாக பரிசோதனை செய்தனர்.
இப்போது அதன் உடலில் இருந்த உண்ணிகளை அகற்றி விட்டு ஊசி மூலமாக மருந்துகளை செலுத்தினர். மேலும் ராஜநாகத்தின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ராஜநாகத்தின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.