தமிழகமே இருளில் மூழ்கியுள்ளது- ராமதாஸ்
கடலூர்: அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து 28 முதல் 30ம் தேதி வரை மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தைலாபுரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது,
மின்வெட்டு காரணமாக தமிழகமே இருளில் மூழ்கியுள்ளது. அரசு அறிவித்துள்ள மின்வெட்டினால் விவசாயிகள், மாணவர்கள், நெசவாளர்கள், சிறு தொழில் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து 28 முதல் 30ம் தேதி வரை மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும்
தற்போதைய மின் பற்றாகுறைக்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என்ற திமுக குற்றச்சாட்டை ஏற்க முடியாது. 2004ல் இருந்தே மின் உற்பத்தி 8,690 மெகாவாட்டாகத்தான் உள்ளது. 2004ல் இருந்து மின்தேவை 5,909 மெகாவாட் ஆனது. தற்போது 2008ல் 9,124 மெகாவாட் மின் தேவையாக அதிகரித்துள்ளது.
மின் தேவையை உணர்ந்து மின் உற்பத்தி திட்டங்களை திமுக அரசு மேற்கொள்ளவில்லை. அரசு இதில் தோற்றுபோய்விட்டது. டாஸ்மாக் விற்பனை இலக்கை நிர்ணயம் செய்து லாபம் ஈட்டும்போது, இலக்கு வைத்து மின் உற்பத்தியை அரசால் உயர்த்த முடியாதா
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் சென்னை தரமணியில் பல ஏக்கர் நிலத்தை டாடா குழுமத்துக்கும், டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் அரசு வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் வீடுகட்டி வாழ நிலம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
மணல் திருட்டு, கல்வி வியாபாரம், சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவது போன்ற பொதுமக்கள் பிரச்னைக்காக குரல் எழுப்பிய காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், தாஸ் ஆகியோரும் தேசிய பாதுகாப்பு. சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அரசியல் பழிவாங்குதலையே காட்டுகிறது என்றார்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லோக்சபாவில் நடந்த குழப்பங்கள் குறித்து அவர் கூறுகையில், அங்கு விவாதமே நடக்கவில்லை என்பதை காட்டுகிறது. அங்கு ஜனநாயக கொள்கையுடன் எதுவும் நடக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இளைஞர்களை அரசியலே வேண்டாம் என்று ஒதுங்க வைத்துவிடும் என்றார்.












Click it and Unblock the Notifications