அமைதியை சீர்குலைக்கவே குண்டுவெடிப்பு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அமைதியை சீர்குலைக்க செய்யப்பட்ட சதியே பெங்களூர் குண்டுவெடிப்பு என அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களிடையே பீதியை ஏற்படுத்திய அமைதியை சீர்குலைக்க நடந்த சதியே இந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம். இது மிகவும் இரக்கமற்ற நடவடிக்கை.
மக்கள் வதந்திகளை நம்பாமல், அமைதி காக்க வேண்டும். பதட்டமடையக் கூடாது.
மடிவாளா பஸ் நிலையப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
காயமடைந்த அனைவருக்கும் சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் எடியூரப்பா.
மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா கூறுகையில், காவல்துறை உளவுப் பிரிவு முறையாக செயல்படவில்லை என்று கூறுவது தவறு. போலீஸார் விழிப்புணர்வுடன்தான் இருந்து வருகின்றனர் என்றார்.
குண்டுவெடிப்பு: சோனியா-பாஜக கண்டனம்
டெல்லி: பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு மிகவும் கோழைத்தனமானது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அலட்சியப் போக்கே, இதுபோன்ற குண்டுவெடிப்புகள் தொடர்வதற்குக் காரணம் என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சோனியா காந்தி விடுத்துள்ள அறிக்கையில், சமூக விரோதிகள் நிகழ்த்தியுள்ள கோழைத்தனமான செயல் இது என்று கண்டித்துள்ளார்.
மத்திய அரசின் மெத்தனப் போக்கே இதுபோன்ற குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தீவிரவாதத்தை தடுப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. தீவிரவாதிகளிடம் மென்மையாக நடந்து கொள்கிறது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தேசியப் பிரச்சினை - அமர்சிங்
சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங் இதுகுறித்துக் கூறுகையில், தீவிரவாதம் தேசியப் பிரச்சினையாகும். இதை வேரறுக்க அரசியல் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும்.
ஆனால் அரசியல்வாதிகள் தேவையில்லாத பிரச்சினைகளுக்காக சண்டை இடுவதற்கே நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறோம். தீவிரவாதம், கல்வி, சுகாதாரம், உள்நாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உள்ளது என்றார் அமர்சிங்.












Click it and Unblock the Notifications