சேது: திமுகவிடம் அரசு சரண்-பாஜக புகார்
டெல்லி: சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில், பதவியில் நீடிப்பதற்காக திமுகவிடம் மன்மோகன் சிங் அரசு சரணடைந்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ராமர் கட்டிய பாலத்தை அவரே இடித்து விட்டார் என சேது சமுத்திரத் திட்ட வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு ஆரம்பத்திலிருந்தே முரண்பாடாக பேசி வருகிறது. முதலில் ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கினார் என்று கேட்டது திமுக.
பின்னர் ராமர் பாலம் இயற்கையாக உருவானது, மனிதர்கள் யாரும் அதை கட்டவில்லை என்றனர். இப்போது சூப்பர்மேன் ஒருவரால் அந்தப் பாலம் கட்டப்பட்டதாக அரசு கூறுகிறது. இதன் மூலம் ராமரையும், அவரது பக்தர்களையும் மத்திய அரசு அவமதித்துள்ளது.
கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதை ஆரம்பத்திலிருந்தே மன்மோகன் சிங் அரசு செய்துவருகிறது. பிரதமர் பதவியில் நீடிக்கவும், அரசைக் காக்கவும் திமுகவிடம் சரணடைந்துள்ளது மத்திய அரசு.
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல கட்சிகளுடன் போட்டுக் கொண்ட ரகசிய ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று.
ஆனால் கெட்டதிலும் நல்லது என்பதைப் போல ராமர் இல்லை, ராமர் பாலம் இல்லை என்று அரசு கூறி வந்த நிலையில் ராமர் இருந்திருக்கிறார், ராமர் பாலத்தை அவர்தான் கட்டினார் என்பதை தனது பதில் மூலம் மத்திய அரசு இப்போதாவது ஒப்புக் கொண்டிருக்கிறது என்றார் ரூடி.
வி.எச்.பி. கண்டனம்
இதற்கிடையே, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் வேதாந்தம் சென்னையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ராமர் தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள பதில் கண்டனத்துக்குரியது.
புகழ் பெற்ற சட்ட மேதைகளில் ஒருவரான பாலி நாரிமன் போன்றோர், அரசுக்காகவும், அரசியல் கட்சிகளுக்காகவும் உச்சநீதிமன்றத்தில் தவறான வாதங்களை எடுத்து வைப்பதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
நாரிமனுக்கு வால்மீகி ராமாயணம் நன்கு தெரியும். அதுதான் அங்கீகரிக்கப்பட்ட ராமாயாணமாகும். ராமரைப் பற்றியும், அவரது அற்புத செயல்கள் குறித்தும் அதில்தான் உண்மையான தகவல்கள் உள்ளன.
வால்மீகி ராமாயணத்தில் தான் கட்டிய பாலத்தை ராமர் இடித்ததாக எங்குமே கூறப்படவில்லை. இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய பின்னர் தான் கட்டிய பாலத்தை ராமர், சீதைக்குக் காட்டினார். அவ்வளவுதான் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் பாலத்ைத ராமர் இடித்ததாக அதில் கூறப்படவில்லை என்று கூறியுள்ளார் வேதாந்தம்.












Click it and Unblock the Notifications