நீலகிரி மாவட்டத்தில் கன மழை-குளிரில் 'நடுங்கும்' ஊட்டி
ஊட்டி: ஊட்டி உள்பட நீலகிரி மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிருடன் போக்குவரத்தும் சீர்கெட்ட, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர், குன்னுர், கோத்தகிரி, ஊட்டி உள்பட மாவட்டத்தின் அனைத்து பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை கொட்டியது. இன்றும் மழை தொடர்கிறது.
தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க நீலகிரி மாவட்டத்தின் பதினோருக்கும் மேற்பட்ட அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் அணைகள் வறண்டன.
இந் நிலையில் கன மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. முதுமலை சரணாலயத்தில் உள்ள மாயார், கல்லட்டி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கிளை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கூடலூரில் இருந்து கேரளாவுக்கு பிரியும் பாண்டியார் புன்னம்புழா ஆற்றிலும் நீர் வெள்ளமாக ஓடிக் கொண்டுள்ளது.
இந்த ஆறுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக குளியல் போட்டு வருகின்றன.
இந்த மழையால் ஊட்டியில் வெப்பநிலை பெரும் அளவில் குறைந்து கடும் குளிர் நிலவுகிறது. கன மழையால் சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவு குறைந்து காணப்படுகிறது.