இடதுசாரிகளுடனான உறவு தொடரும்: கருணாநிதி

3வது அணிக்கு திமுக தாவப் போகிறது என்று நேற்றுதான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில், எந்தக் காரணத்திற்காகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான திமுக உறவில் விரிசல் வராது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
'அது வேறு - இது வேறு':
டெல்லி சென்றிருந்த முதல்வர் நேற்று சென்னை திரும்பினார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நமது நாட்டின் அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், மத்திய அரசியல் தொடர்பாக ஒரு அரசியல் கட்சி எடுக்கும் நிலை, மாநில அரசியலுக்கும் பொருந்த வேண்டிய அவசியம் இல்லை என்பது புரிய வரும்.
நமது நாட்டு அரசியல் வரலாற்றை முறையாக, தெளிவாக தெரிந்து கொண்டிருந்தால் இது புரிய வரும்.
அணு சக்தி திட்டத்திற்கு எதிராகவும், விலைவாசி, பண வீக்கம் உயர்வு உள்ளிட்டவை குறித்து போராடப் போவதாக இடதுசாரிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களோடு ஆலோசனை நடத்துவேன். கட்சியின் உயர் மட்ட செயல் திட்டக் குழு இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கும். முடிவெடுத்த பின்னர் அதை அனைவருக்கும் அறிவிப்பேன்.
சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகர் பதவியில் தொடருவதில் எந்த பிரச்சினையும் இல்லை. இது குறித்து டெல்லியிலேயே நான் தெளிவாக விளக்கி விட்டேன். இதற்கு மேல் இதுகுறித்துப் பேச விரும்பவில்லை.
தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். அப்போது கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டுக்கு செல்லும்போது, இலங்கை அரசுடன் பேசி இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டுவதாக உறுதியளித்தார் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications