காரைக்குடியில் எம்.ஜி.ஆர் சிலை தலை துண்டிப்பு
காரைக்குடி: காரைக்குடியில் எம்.ஜி.ஆர் சிலையின் தலை துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சிலையை சேதப்படுத்திய விஷமிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி 5 முனை சந்திப்பில் மார்பளவிலான எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இன்று காலை இந்த சிலையின் தலை துண்டிக்கப்பட்டு கீழே கிடந்தது. இதைப் பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்து அங்கு திரண்டனர். பெருமளவில் அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பும், பதட்டமும் நிலவியது. சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி அவர்கள் கோஷமிட்டு சாலை மறியலில் இறங்கினர்.
அப்போது காரைக்குடி வந்திருந்த அதிமுக அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சேதமடைந்த சிலையைப் பார்வையிட்ட அவர் பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் குறித்து கட்சித் தலைமைக்குத் தெரிவித்திருப்பதாகவும், போலீஸார் நடவடிக்கையைப பொருத்து, கட்சித் தலைமையின் முடிவின்படி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications