மின் தடை-கண்டித்து ஆக-1ல் சரத்குமார் ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின்சாரத் தடை, உரத் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றைக் கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு அறிவித்திருக்கும் மின்வெட்டுக்களால், இருள் சூழ்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பட்டினியால் வாடும் அவல நிலை மற்றும் மீனவர்களின் மீதான தொடர் தாக்குதல்களால் அலைகடலோரமெங்கும், அழுகுரல்கள் சூழ்ந்து நிற்கும் பரிதாபம்.
பொய்த்துவிட்ட தென்மேற்கு பருவ மழையாலும், கேள்விக்குறியாகி நிற்கும் வடகிழக்கு பருவ மழையாலும், மேட்டூர் மற்றும் பெரியார் அணைக்கட்டுகளில் குறைந்துவரும் நீர்த்தேக்க அளவுகளாலும், தொடர்ந்து நிலவிவரும் உரத் தட்டுப்பாடுகளாலும், பெரும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகளின் துயரநிலை, கட்டுப்பாடின்றி வின்முட்டும் அளவுக்கு உயர்ந்துவரும் விலைவாசி.
இரட்டிப்பாகிவிட்ட கல்விக் கட்டணங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தற்போது சென்னை வரை நீண்டுவிட்ட சைக்கோ மனித தாக்குதல்கள், தொடர்கொலை சம்பவங்கள் என நிம்மதியையும், தூக்கத்தையும் இழந்து நிற்கிறார்கள் மக்கள்.
இப்படி அனைத்து துறைகளிலும், முற்றிலுமாய் செயலிழந்து நிற்கும் தமிழக அரசை வன்மையாக கண்டித்து வருகிற 1.8.2008 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்கள் இணைந்து நடத்தப்படுகிறது. சரத்குமார் தலைமையேற்று நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.