இந்திய ஒப்பந்தம்-உறுப்பு நாடுகளுக்கு ஐஏஇஏ விளக்கம்
வியன்னா: இந்தியா தொடர்பான பாதுகாப்பு அம்ச வரைவு ஒப்பந்தம் குறித்து தனது உறுப்பு நாடுகளிடம் சர்வதேச அணு சக்தி ஏஜென்சி விளக்கம் அளித்துள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக உறுப்பு நாடுகளிடம் இந்தியா தொடர்பான பாதுகாப்பு அம்ச வரைவு ஒப்பந்தம் குறித்து உறுப்பு நாடுகளிடம் ஏஜென்சியின் செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜூலை 9ம் தேதி வரைவு ஒப்பந்தம் ஏஜென்சியிடம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஏஜென்சியில் உறுப்பினர்களாக உள்ள 144 நாடுகளுக்கும் இது சுற்றுக்கு விடப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்து ஏஜென்சிக்கு கடிதம் எழுதியது. இதைத் தொடர்ந்து நேற்று உறுப்பு நாடுகளிடம் இந்த வரைவு ஒப்பந்தம் குறித்து ஏஜென்சியின் செயலகம் விளக்கம் அளித்தது. இந்த ஒப்பந்தம் குறித்து சந்தேகம், விளக்கம் தேவைப்பட்டால் கேட்கலாம் எனவும் ஏஜென்சி உறுப்பு நாடுகளை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பான கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல உறுப்பினற்கள் டெக்னிக்கல் மற்றும் அரசியல் ரீதியிலான சந்தேகங்களைக் கேட்டதாக தெரிகிறது. சில நாடுகள் இந்தியா அணு சக்தி நாடா என்றும் கேள்வி கேட்டதாக தெரிகிறது. கூட்டத்தில் பரிமாறப்பட்ட விஷயங்கள், விவாதங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை.