பாஜக எம்.பிக்களுக்கு லஞ்சம்-விசாரிக்க குப்புசாமி உள்ளிட்ட 7 பேர் குழு
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 3 பாஜக எம்பிக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் லஞ்சம் கொடுக்கப்பட்டது குறித்த விவகாரத்தை காங்கிரஸ் எம்.பி தலைமையிலான 7 பேர் கொண்ட விசாரணைக் குவுவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நியமித்துள்ளார்.
இந்தக் குழுவில் திமுக எம்பி குப்புசாமியும் இடம் பெற்றுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த 22ம் தேதி வாக்கெடுப்பு நடந்தது. அப்போது பாஜக எம்பிக்கள் அசோக் ஆர்கல், பகன்சிங் குலஸ்தே, மகேஷ் பகோரா ஆகியோர், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக லோக்சபாவில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி சர்ச்சை எழுப்பினர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சம்பந்தபட்ட பாஜக எம்பிக்கள் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாகவும் புகார் தரப்பட்டது. லஞ்சம் தரப்பட்டது தொடர்பான வீடியோ டேப்பை, சிஎன்என் டிவி நிறுவனமும் சபாநாயகரிடம் வழங்கியுள்ளது.
இதையடுத்து 7 பேர் கொண்ட விசாரணைக் குழுவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.
இந்தக் குழுவின்தலைவராக மூத்த காங்கிரஸ் உறுப்பினர் கிஷோர் சந்திரா தியோ அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தவிர லோக்சபா பாஜக துணைத் தலைவர் வி.கே. மல்ஹோத்ரா, முகமது சலீம் (சிபிஎம்), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி), தேவேந்திர பிரசாத் யாதவ் (ஆர்.ஜே.டி), ராஜேஷ் வர்மா (பகுஜன் சமாஜ்), செ.குப்புசாமி (திமுக) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க விசாரணை குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக லோக்சபா செயலாளர் ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து விசாரணை நடைமுறைகள் குறித்து முடிவு எடுப்பதற்கான முதல் கூட்டத்தை விரைவில் கூட்ட இருப்பதாக விசாரணை குழு தலைவர் கிஷோர் சந்திர தியோ தெரிவித்தார்.