'தமிழ் மறதி': மத்திய அமைச்சர் வேதனை
பழனி: தமிழ்நாட்டிலேயே தமிழ் மறக்கப்படுவது வேதனையாக இருக்கிறது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் வேங்கடபதி தெரிவித்தார்.
பழனி அக்ஷயா அகாடமியில் மாநில மகளிர் ஆணையம் சார்பில் பெண்களுக்கான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைந்தது. இதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வேங்கடபதி பேசியதாவது:
பழங்காலத்திலும், இப்போதும் பெண்கள் மிகவும் மதிக்கப்படுகின்றனர். இடைப்பட்ட காலத்தில் பெண்களை ஆண்கள் போகப் பொருளாகவும், அடிமைகளாகவும் மாற்றிவிட்டனர்.
பகுத்தறிவின்றி பெண்களை இழிவாக பேசுவது சரியல்ல. அன்னி பெசன்ட் அம்மையாரின் அறிவுரையை கேட்ட பிறகு பாரதியார் பெண் விடுதலைக்காகப் பாடல்கள் பாடத் துவங்கினார்.
பெண்ணிடம் அனுமதி கேட்ட பின்னரே திருமணம் நடத்தும் சுதந்திரம் வர வேண்டும். அவர்களுக்கு உரிமையைத் தந்தால் எல்லா இடத்திலும் ஒளிர்வார்கள்.
குழந்தைகள் ஆங்கில பேசுவதையே அதிகமான பெற்றோர்கள் விரும்புகின்றனர். குழந்தைகள் தாய்மொழியாம் தமிழை எப்படி பேசுகிறார்கள் என்பதை கவனிப்பதில்லை.
தமிழகத்திலேயே தமிழ் மறக்கப்படுவது வேதனையாக இருக்கிறது. தொடர்ந்து ஐந்து நிமிடம் தூய தமிழில் பேச முடிவதில்லை என்பது தலைகுனிவானது என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications