தீவிரவாதம்: தடுக்க உறுதியான நடவடிக்கை-இல.கணேசன்
சென்னை: தீவிரவாத தாக்குதல்களை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூரைத் தொடர்ந்து அகமதாபாத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் மிகவும் கண்டனத்துக்குரியது.
ஆனால் வெறும் கண்டனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உறுதியான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வெடிகுண்டு சம்பவங்கள் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே நடைபெற்றுள்ளன. இது திட்டமிடப்பட்டு செய்த செயலாக தெரிகிறது. மத்தியில் பெரும்பான்மை பெற முறைகேடான வழிமுறைகளை காங்கிரஸ் பின்பற்றியது. அதிலிருந்து மக்களின் கவனத்தை இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் திசை திருப்பும்.
ஆனால் இந்த தாக்குதலின் பின்னணியில் தேசத்தின் பாதுகாப்பு அடங்கியுள்ளது என்பதை உணராமல் பொறுப்பற்ற முறையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நாடு கலவர பூமியாக மாற அங்கே யார் காரணமாக அமைகிறார்கள். பாஜக ஆட்சி அதிகார பகுதிகளில்தான் நாடு அமைதியை இழக்கிறது. அந்த மாநில பாஜக ஆட்சி மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை என்று குறிப்பிட்டிருப்பதில் இருந்து இந்த சம்பவங்களின் பின்னணியில் காங்கிரசின் பங்கு இருக்குமோ? என்ற சந்தேகம் உண்டாகிறது.
இதுவரை மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாத ஒரு அமைப்பு பாபுலர் பிரெண்ட் என்கின்ற பெயரில் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று அணிவகுப்பு நடத்த போவதாக அறிவித்துள்ளது.
அவர்கள் தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்திருப்பதை பார்க்கும்போது ஒரு பெரிய சக்தி பின்னணியில் இருப்பது தெரிய வருகிறது. இந்த அணிவகுப்பு நாடு சுதந்திரம் பெற்றதை கொண்டாட அல்ல என்பது அவர்களே வெளியிட்டுள்ள துண்டு பிரசுரம் மூலம் தெரியவருகிறது.
சுதந்திர தினம் ஒரு பொதுவான தினம். அந்த நாளில் இத்தகைய மதவெறியின் பின்னணியிலான வகுப்புவாத அணிவகுப்பினை நடத்த காவல்துறை எப்படி அனுமதி தந்தது என்பது வியப்பாக உள்ளது. தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலையில் இத்தகைய அணிவகுப்புகள் மேலும் பதட்டத்தை உருவாக்கும்.
மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தப்பியதற்காக மகிழ்ச்சி தெரிவித்து காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். மத்திய அரசு தப்பி விட்ட மகிழ்ச்சியினை பயங்கரவாதிகள் வெடி குண்டு வைத்து கொண்டாடுகிறார்கள். தங்களுக்கு ஆதரவான அரசு நீடித்துவிட்டதே என்கின்ற மகிழ்ச்சி போலும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications