இலங்கை தூதரகம் முன்பு சிபிஐ ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும், இதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
1974ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவில், இந்திய மீனவர்களுக்கு உரிமையை நிலை நாட்ட வேண்டும். இதுதொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையைக் கண்டித்தும் இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அது அறிவித்திருந்தது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில், 1974ம் ஆண்டு, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.
இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில், இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்கலாம் என்பதோடு, அங்கு தங்களது வலைகளை உலர்த்தி ஓய்வெடுக்கவும் உரிமையும், அனுமதியும் தரப்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஒப்பந்தம் 1976ம் ஆண்டு திருத்தப்பட்டு விட்டது. அது முதல் இந்திய மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
1983ம் ஆண்டு இலங்கை கடற்படை, இந்திய மீனவர்களை குருவிகளை சுடுவது போல சுட்டு வீழ்த்த ஆரம்பித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான மீனவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
இந்திய மீனவர்கள் எடுத்த ஆய்வின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 67 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
ஆகஸ்ட் 2ம் தேதி கொழும்பில் தொடங்கும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் பேச வேண்டும். அது மட்டுமல்லாமல், கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் உரிமையை உறுதி செய்வது குறித்தும் பேச்சு நடத்த வேண்டும்.
இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்குவதையும், உதவிகள் செய்வதையும் இந்திய அரசு நிறுத்த வேண்டும். இவற்றைக் கொண்டு தமிழ் மக்களை அழித்து வருகிறது இலங்கை அரசு.
கச்சத்தீவு விவகாரத்தை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி இன்று காலை டி.ராஜா, தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் எம்பிக்கள் சிவ புண்ணியம், ராஜசேகர், பத்மாபதி உட்பட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் டிடிகே சாலையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக மியூசிக் அகாடமி அருகே திரண்டனர்.
ஊர்வலத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் துவக்கி வைத்தார். போராட்டத்தையொட்டி துணை கமிஷனர் மவுரியா தலைமையில் இலங்கை துணை தூதரகம் முன்பு தடுப்புகள் ஏற்படுத்தி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
ஊர்வலமாக சென்று துணை தூதரகம் முன்பு முற்றுகையிட சென்ற 300க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.