சூரத்தில் மோடி-இன்றும் 2 குண்டுகள் கண்டுபிடிப்பு
சூரத்: சூரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை மீண்டும் இரு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சூரத்தில் 18 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டன. இது அந்நகரத்தையே பீதியில் ஆழ்த்தியது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி சூரத்துக்கு இன்று காலை சென்றார். குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட பகுதிகளை மோடி பார்வையிட்டார்.
இந் நிலையில் சூரத்தின் வராச்சா சாலையில் லபேஷ்வர் என்ற இடத்தில் இன்று காலை ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாலையில் நனாய் செளபதி என்ற பகுதியில் மரத்தில் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
குஜராத்தில் பந்த்:
இந் நிலையில் இன்று சில அமைப்புகள் குஜராத்தில் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு:
சூரத்தில் வராத்தா பகுதியில் தான் அதிக அளவில் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.