ஆக. 1ல் சூரிய கிரகணம்-வெறும் கண்களால் பார்க்கக் கூடாது
சூரியனுக்கும், பூமிக்கும் நடுவே சந்திரன் வருவதால் சூரியன் மறைக்கப்படும். இதுவே சூரிய கிரகணம் எனப்படுகிறது. சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைப்பதால் முழு கிரகணம் உண்டாகிறது.
சூரிய கிரகணம் கனடாவில் ஆரம்பித்து வடக்கு கிரீன்லாந்து, ஆர்க்டிக்,, ரஷ்யா, மங்கோலியா, சீனா வழியாக நடைபெறும். இதன் காரணமாக ரஷ்யா, மங்கோலியா, ஆர்க்டிக் பிராந்தியங்களில் சூரிய கிரகணம் முழுமையாக இருக்கும்.
வட அமெரிக்காவில் வடக்கு, கிழக்கு பகுதிகள், கிரீன்லேண்ட், வடக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் தவிர ஆசியாவின் மற்ற நாடுகளில் முழு கிரகணம் தெரியும். அதேசமயம், இந்தியாவில் இது பகுதி சூரிய கிரகணமாக இருக்கும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.34க்கு சூரிய கிரகணம் தொடங்கும். கனடாவின், நியூ பெளன்ட்லேண்ட் அருகே வடக்கு அட்லாண்டிக் கடலில் சூரிய கிரகணம் முதலில் தெரியும். மாலை 6.08 மணிக்கு அந்தமான், நிக்கோபார் தீவுகள் அருகே வங்கக் கடலில் கிரகணம் முடிவடையும்.
முழு சூரிய கிரகணத்தை பிற்பகல் 2.53 மணிக்கு, வடக்கு கனடாவின் விக்டோரியோ தீவின் தென் கிழக்கு கடற்கரை அருகே பார்க்க முடியும். முழு சூரிய கிரகணம் 4.50 மணிக்கு தென் கிழக்கு சீனாவின் ஸியான் அருகே முடிவடையும்.
முழு சூரிய கிரகணம் மொத்தம் 2 நிமிடம் 30 விநாடிகளுக்கு நீடிக்கும்.
இந்த சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூலை 22ம் தேதி இன்னொரு முழு சூரிய கிரகணம் வருகிறது.
தமிழகத்தில் ..
சென்னையில் மாலை 4.40 மணி முதல் 6.08 மணி வரை கிரகணம் தெரியும். உச்ச நிலை மாலை 5.25 மணிக்கு காணப்படும்.
புதுச்சேரியில் மாலை 4.44 மணி முதல் 6.07 வரை கிரகணம் காணப்படும். உச்ச நிலை மாலை 5.27 மணிக்கு ஏற்படும்.
தஞ்சாவூரில் மாலை 4.47 மணி முதல் 6.07 வரை காணப்படும்.உச்ச நிலை 5.28 மணிக்கு ஏற்படும்.
மதுரையில் மாலை 4.50 மணி முதல் 6.06 மணி வரை காணப்படும். உச்ச நிலை மாலை 5.29 மணிக்கு ஏற்படும்.
நெல்லையில் மாலை 4.54 மணி முதல் 6.05 மணிவரை காணப்படும். உச்ச நிலை மாலை 5.31 மணிக்கு ஏற்படும்.
கன்னியாகுமரியில் மாலை 4.57 மணி முதல் 6.05 வரை காணப்படும். உச்ச நிலை மாலை 5.32 மணிக்கு ஏற்படும்.
சூரிய கிரகணத்தை வெறும் கண்ணாலோ, டெலஸ்கோப் மூலமாகவோ, பைனாகுலர் மூலமாகவோ பார்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறிப் பார்த்தால், கண் பார்வை பாதிக்கப்படும்.
டெலஸ்கோப் மூலம் இந்த கிரகணத்தை ஒரு சுவரிலோ அல்லது திரையிலோ விழச் செய்து பார்க வேண்டும். அப்போதுதான் கண்களுக்கு பாதுகாப்பு' என்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தின் மேலாண்மை இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார்.
இதற்கான பாதுகாப்பான ஏற்பாடு அறிவியல் மையத்தில் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை கண்டு களிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவில் மூடல்:
சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதியில்உள்ள வெங்கடாசலபதி கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் என ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதேபோல தமிழகத்தின் முக்கிய கோவில்களிலும் அந்த சமயத்தில் நடை சாத்தப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 16ம் தேதி சந்திர கிரகணம் வருவது குறிப்பிடத்தக்கது.