அரசு கேபிளில் சன், ஸ்டார், சோனியை சேர்க்க சட்ட நடவடிக்கை!
சென்னை: அரசு கேபிள் டி.வி.யில் சன் டி.வி., ஸ்டார் டி.வி., சோனி டி.வி. குழுமங்களின் சேனல்களை இணைப்பது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அரசு கேபிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு கம்பி வட (கேபிள்) தொலைக்காட்சி நிறுவனம் படிப்படியாகத் தனது சேவைகளை தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் விரிவுபடுத்தி வருகிறது. இம்மூன்று மாவட்டங்களில் இதுவரை 169 உள்ளூர் கம்பிவட இயக்குபவர்கள் கம்பி வட சேவையை இந்நிறுவனத்திலிருந்து பெற்றுள்ளார்கள்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் 33 உள்ளூர் கம்பி வட இயக்குபவர்களுக்கு இணைப்பு அளித்துள்ளதையும் சேர்த்து மொத்தம் 202 உள்ளூர் கம்பி வட இயக்குபவர்கள் இணைப்பு பெற்றுள்ளார்கள்.
புதிய கம்பிவட இயக்குபவர்கள் பெருமளவில் அரசு கம்பிவட தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து சேவைகளைப் பெற தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர். அரசு கம்பி வட இணைப்பை பெற்ற யாரும் இந் நிறுவனத்திலிருந்து விலகவில்லை.
அரசு கம்பி வட தொலைக்காட்சி நிறுவனம் தற்போது 23 கட்டண சேனல்களையும் சேர்த்து 73 சேனல்களை விநியோகித்து வருகிறது. கீழே குறிப்பிட்டுள்ள விளையாட்டு சேனல்களும் இவற்றில் அடங்கும்.
ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ், ஜி ஸ்போர்ட்ஸ், டி.டி.ஸ்போர்ட்ஸ், நியோ ஸ்போர்ட்ஸ் மற்றும் நியோ ஸ்போர்ட்ஸ் பிளஸ், எல்லா தமிழ் சேனல்களும் (விஜய், ஸ்டார் குரூப் டி.வி. மற்றும் சன் டி.வி. குழும சேனல்களைத் தவிர) அரசு கம்பி வட தொலைக்காட்சி நிறுவனத்தால் தற்பொழுது விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் ஸ்டார், சன் மற்றும் சோனி எண்டர்டைன்மென்ட் நிறுவனங்கள், அரசு கம்பி வட தொலைக்காட்சி நிறுவனம் லிமிடெட் அவர்களின் சேவைகளை அளிக்கக் கோரியதற்கு இதுவரை பதில் அளிக்காமல் உள்ளனர். இவர்களும் தங்கள் சேனல்களை தருவது சம்பந்தமாக சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தக்க சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.