கார்-பஸ்-லாரி மோதி தீ விபத்து- இருவர் பலி
மதுரை: மதுரை அருகே கார், பஸ் மற்றும் லாரி ஆகியவை அடுத்தடுத்து மோதிய விபத்தில் பஸ்சும், லாரியும் தீப்பிடித்து எரிந்தன. இதில் கார் டிரைவரும் பஸ் பயணி ஒருவரும் பரிதாபமாக இறந்தனர்.
மதுரையில் இருந்து ராஜபாளையத்திற்கு நேற்று காலை கார் ஒன்று புறப்பட்டுச் சென்றது. மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த டிரைவர் நாகேந்திரன் காரை ஓட்டிச் சென்றார். அதேப் பகுதியைச் சேர்ந்த பாண்டி மற்றும் சையது இப்ராகிம் ஆகியோர் காரில் சென்றனர்.
மதுரை மாவட்ட எல்லையான பாறைபட்டிக்கும், விருதுநகர் மாவட்ட எல்லையான அழகாபுரிக்கும் இடையே காலை 10.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது.
காருக்கு முன்னால் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பக்கவாட்டில் கார் முந்தி சென்றது. அப்போது அப்போது எதிரே செங்கோட்டையில் இருந்து திருப்பூருக்கு செல்லும் அரசு பஸ்சும் வேகமாக வந்தது.
இதில் பஸ்சும் காரும் பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் கார் நூறு அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு அப்பளம்போல் நொறுங்கியது. இதில் கார் டிரைவர் நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மோதிய வேகத்தில் காருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி மீது பஸ் மோதி நின்றது. இதில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து தீப்பிடித்து எரிந்தது.
பஸ்சில் இருந்த 80 பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சை விட்டு இறங்கி ஓடினர். அதற்குள் பஸ்சும், லாரியும் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த பேரையூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரியும், பஸ்சும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
விபத்தில் காயமடைந்த 8 பேர் திருமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மதுரை மருத்துமனையிக்கு கொண்டு செல்லும்போது இறந்தார். இறந்தவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications