மதுரையில் பிடிபட்ட வெடிபொருள் வல்லநாட்டில் செயலிழப்பு
நெல்லை: மதுரை அருகே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை போலீசார் வல்லநாட்டில் செயலிழக்க வைத்தனர்.
வெடிகுண்டு மூலப்பொருட்கள் மற்றும் டைமர் கருவிகளுடன் பிடிபட்ட நெல்லையை சேர்ந்த தீவிரவாதி அப்துல் காபூரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அப்துல் கபூர் கொடுத்த தகவலின்படி மதுரை அடுத்த பாண்டி கோயில் அருகே புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை நெல்லை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் அப்துல் கபூரின் கூட்டாளியான முஸ்தபா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே நெல்லை போலீசாரிடம் சிக்கினான். பின்னர் அவனை தனி இடத்தில் வைத்து போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மதுரை அருகே பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு மூலப்பொருட்களை நெல்லை போலீசார் பத்திரமாக பாளை பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அந்த வெடிபொருளின் தன்மை மற்றும் வீரியத்தை போலீசார் மிகவும் கவனமாக ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்த வெடிபொருட்களை வல்லநாட்டில் வெடிக்க வைத்து, வெடிகுண்டு தயாரிப்பதற்கான கருவிகளை செயல் இழக்க செய்தனர்.