சொத்து குவிப்பு: அமைச்சர் கீதா ஜீவனை விடுவிக்க ஹைகோர்ட் மறுப்பு
மதுரை: வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை விடுவிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை மறுத்து விட்டது.
தமிழக சமுக நலத்துறை அமைச்சராக இருப்பவர் கீதா ஜீவன். இவர் முன்பு தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
அப்போது தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கீதா ஜீவன், அவரது தந்தையும் மாவட்ட திமுக செயலாளருமான பெரியசாமி, அவரது மனைவி, இரு மகன்கள், கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் கீதா ஜீவன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து கீழ் நீதி மன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, மதுரை உயர் நீதி மன்ற கிளையில் சீராய்வு மனுவை அமைச்சர் கீதா ஜீவன் தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. மேலும், மனுதாரர் தனது வருமானத்தில் சொத்துக்களை வாங்கியதற்குரிய ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.
எனவே இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க இயலாது என்று கூறி அமைச்சர் கீதா ஜீவனின் மனுவை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications