சூரத்- இதுவரை 26 குண்டுகள் கண்டுபிடிப்பு
சூரத்: சூரத்தில் இன்று காலை மீண்டும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் சேர்த்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இது சூரத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் சூரத்தில் 18 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டன.
நேற்று பகலில் மேலும் 2 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டன. நேற்று இரவில் 5 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை சூரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அங்க்லேஷ்வர் என்ற பகுதியில் மேலும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து மொத்தம் 26 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு சந்தைக்கு குண்டு மிரட்டல்:
இதற்கிடையே குஜராத்தின் வதோதரா பங்குச் சந்தைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
பங்குச் சந்தையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக இன்று வந்த இ-மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானிலும்..:
ராஜஸ்தான் பாலியில் உள்ள மார்வார் ஜங்ஷன் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று 3 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது அது 4ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது.