புதிய கேஸ் இணைப்பு தற்காலிகமாக நிறுத்தம் - இந்தியன் ஆயில்
டெல்லி: வீடுகளுக்கு புதிய சமையல் கேஸ் இணைப்புகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பெஹூரியா கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் ஜூன் வரையிலான 3 மாதத்தில் ஐஓசியின் நஷ்டம் அதிகரித்துள்ளது. எனவே புதிய சமையல் கேஸ் இணைப்பு வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளோம்.
தற்போது 2 லட்சத்துக்கும் அதிகமானோர் சமையல் கேஸூக்கு விண்ணப்பித்துள்ளனர். நஷ்டம் காரணமாக ஓராண்டுக்கு புதிய இணைப்புகள் வழங்குவதில்லை என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதிய இணைப்புகளுக்காக ஆலை விரிவாக்கம் செய்யும் திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு வழங்கும் அளவுக்கு நிறுவனத்தில் மூலதனமும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இணைப்புகள் வழங்கப்படவில்லை.
ஒரு சிலிண்டருக்கு ரூ.338.53 அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றார் அவர்.
தற்போது ஐஓசியில் 9.8 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். நடப்பு நிதியாண்டில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விற்பனை மூலம் இந்நிறுவனத்துக்கு ரூ.1 லட்சத்து 21,015 கோடி நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.