தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்ட தமிழகம்-பாஜக
திண்டுக்கல்: தீவிரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டதாக பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டிள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பெருமாள்பட்டி கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா அங்கு சென்றார். அப்பகுதியிலுள்ள இந்துக்களை சந்தித்துப் பேசிய பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த கிராமத்தில் இந்த நிலம் தொடர்பாக கடந்த 85 வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. தமிழகத்தில் பல தேவாலயங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன. அதை நாங்கள் கைப்பற்ற நினைத்தால் நிலைமை விபரீதமாகிவிடும்.
இந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட டிஎஸ்பி வெங்கிடுசாமி, தாசில்தார் கணேசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தும் தீவிரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறியுள்ளது.
உள்த்துறை அமைச்சகமே எச்சரித்துள்ள சில அமைப்புகளின் அணிவகுப்பை நடத்த தமிழகத்தில் அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது சேது விரோத, இந்து விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.