கொடு்த்தது எம்ஜிஆரா, கருணாநிதியா- திமுக விவசாய அணி
சென்னை: முதல்வர் கருணாநிதி மீது தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், இதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திமுக விவசாய அணி கூறியுள்ளது.
இது குறித்து திமுக விவசாய அணிச் செயலாளர் கே.பி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடிகர் விஜயகாந்த் தன்னை அரசியல் கட்சி தலைவராக காட்டிக் கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி மீது புழுதி வாரி தூற்றி பேசியிருக்கிறார். அதற்கு முதல்வர் கருணாநிதி, தன் ஆட்சி நிர்வாகத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய சலுகைகளை பட்டியலிட்டார்.
இந்த பட்டியலை பார்த்த பின்னரும், தன்னை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் மின்துறை அமைச்சராக இருந்தவர் (பண்ரூட்டி ராமச்சந்திரன்?) இந்த அறிக்கையினை எழுதி கொடுத்தபோது இதை ஏன் மறந்தார்? மறைத்தார்? என்று தெரியவில்லை.
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை. மின் கட்டணச் சலுகை மட்டுமே வழங்கப்பட்டது. எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு குதிரை திறனுக்கு ரூ.75 என்று சலுகை நிர்ணயிக்கப்பட்டது. அதுவும் அது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டும்தான் மின் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டது.
முதல்வர் கருணாநிதி வழங்கியது போல அனைத்து விவசாயிகளுக்கும் பயன்படுத்தும் மின் மோட்டார்களுக்கு முழுவதுமாக இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை.
இந்த இலவச மின்சார திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல்வர் கருணாநிதியால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இது தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்ல, இந்திய விவசாயிகளுக்கே நன்றாக தெரியும்.
நெல்லுக்கு சாதாரண ரகத்தின் கொள்முதல் விலை ஆயிரம் ரூபாய் என்றும், சன்னரகம் ரூ.1,050 என்றும் அறிவித்தவர் முதல்வர் கருணாநிதி. விவசாயிகளுக்கு தொழிலாளர் வாரியத்தை அமைத்து, அதன் மூலம் ஏராளமான சலுகைகளை வழங்குபவரும் அவர்தான் என்பதை தமிழக விவசாயிகள் அறிவர்.
அதனால் இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவதை விஜயகாந்த் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.