ஊழல் அதிகாரிகளை தீர்த்துகட்ட திட்டம்-ஹீரா வாக்குமூலம்
சென்னை: முஸ்லீம் சமூகத்தினருக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளையும், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளையும் கொல்ல திட்டமிட்டிருந்ததாக தீவிரவாதி ஹீரா கூறியுள்ளார்.
நெல்லையில் கைதான தீவிரவாதி அப்துல் கபூர் கொடுத்த தகவலின்படி மற்றொரு தீவிரவாதி ஹீரா சென்னையில் கைது செய்யப்பட்டார். நெல்லை கொண்டு செல்லப்பட்ட ஹீராவிடம் போலீஸ் கமிஷனர் மஞ்சநாதா உள்பட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஹீரா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் இறைவன் ஒருவனே அமைப்பின் ரகசிய கூட்டம் நடந்தது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனை கொல்ல கலெக்டர் அலுவலகத்தில் முகாமிட்டோம். கூட்டம் அதிகமாக இருந்ததால் அதை செயல்படுத்த முடியவில்லை.
சென்னை மண்ணடியில் தங்கியிருந்தபோது கடந்த மே 5ம் தேதி என்னையும் கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்த என்னை எனது உறவினரான அப்துல் கபூர் அடிக்கடி சந்திக்க வருவார்.
சிறையில் இருந்த அலி அப்துல்லாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்துல் கபூரையும் அலி அப்துல்லாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். எங்கள் இயக்கத்துக்கும் எங்கள் சமூகத்தினருக்கும் கொடுமை செய்பவர்களை கொல்ல திட்டமிட்டோம். அதற்காக பொது இடங்களில் குண்டு வைக்கு முடிவு செய்தோம்.
அலி அப்துல்லாவை சென்னை சிறையில் கொடுமை செய்த அதிகாரிகளையும், தென்காசி டிஎஸ்பி மயில்வாகனனையும் குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டோம்.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கேட்டுச் சென்றால் லஞ்சம் கேட்கின்றனர். ஜாதி சான்றிதழுக்கு கூட பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் இழுக்கடிக்கின்றனர். இதனால் வெளிநாடு செல்ல முடியாமல் எங்கள் சமூக இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்திலும் குண்டு வைக்க திட்டமிட்டோம்.
தமிழகம் முழுவதும் எங்கள் சமூகத்துக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து வைத்துள்ளோம். அவர்களை தீர்த்து கட்டவும் திட்டம் தீட்டியுள்ளோம். நாட்டில் எந்த மூளையில் எங்கள் சமூகத்துக்கு எதிராக அநீதி நடந்தாலும், அதை தட்டிக் கேட்கும் வகையில் தமிழகத்தில் பதிலடி கொடுக்க முடிவு செய்தோம்.
எங்கள் இயக்கத்தில் உள்ள பலர் வெளியில் உள்ளனர். அவர்கள் இந்த திட்டத்தை செய்து முடிப்பார்கள் என்று ஹீரா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நெல்லை கொண்டு செல்லப்படும் அப்துல்லா:
இந் நிலையில் சதி திட்டத்தின் தலைவராக செயல்பட்ட தீவிரவாதி அலி அப்துல்லாவை தனிப்படை போலீசார் நெல்லை அழைத்து செல்கின்றனர்.
தீவீரவாதி அலிஅப்துல்லா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு உள்பட 8 வழக்குகளில் கைதாகி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்தபடியே செல்போன் மூலம் தீவிரவாதி கபூருடன் பேசி குண்டு வைக்கும் திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டார். விசாரணையில், தீவிரவாதி கபூர், பார்வையாளராக புழல் மத்திய சிறைக்கு சென்று அலி அப்துல்லாவை 4 முறை சந்தித்து பேசியுள்ளதும் தெரியவந்துள்ளது.
சதித்திட்டத்தின் மூளையாக செயல்பட்டுள்ள அலி அப்துல்லாவை இன்னொரு வழக்கில் நெல்லை போலீசார் நேற்று மீண்டும் கைது செய்தனர். அலி அப்துல்லா மீதான வழக்குகள் சென்னை பூந்தமல்லி தனி கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. பூந்தமல்லி கோர்ட்டில் அனுமதி பெற்று அலிஅப்துல்லாவை இன்று, அல்லது நாளை தனிப்படை போலீசார் நெல்லை அழைத்து செல்கிறார்கள்.
மத்திய சிறைகளில் அதிரடி சோதனை:
சிறைகளில் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க மத்திய ஜெயில்களில் நவீன ஜாமர் கருவிகளை பொருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று கூடுதல் டிஜிபி ஆர்.நடராஜ் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் போலீசாரும், சிறை அதிகாரிகளும் சேர்ந்து தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் சுமார் 160 தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை புழல் சிறையில் தீவிரவாதிகள் பாஷா, ஏர்வாடி காசிம், ராஜா உசேன் உள்பட சுமார் 25 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அறைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications