சென்னையில் விடுதலைப்புலி கைது-'க்யூ பிராஞ்ச்' அதிரடி
சென்னை: சென்னையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீட்டில் புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர் பதுங்கியிருப்பதாக க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து க்யூ பிராஞ்ச் போலீசார் நேற்று மாலை அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
அந்த வீட்டில் இருந்த தம்பி அண்ணா என்ற டேனியலை (46) கைது செய்தனர்.
கிளிநொச்சியை சேர்ந்த இவர் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த சில மாதங்களாகவே சென்னையில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.
அவர் எதற்காக சென்னை வந்தார், யாரை சந்தித்துப் பேசினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விடுதலைப் புலிகளுக்கு தேவையான சாதனங்கள், பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக இவர் சென்னையில் முகாமிட்டிருந்ததாக போலீசார் கருதுகின்றனர்.
இவரைப் பற்றிய முழு விவரங்களையும் டி.ஜி.பி. ஜெயின் இன்று தெரிவிப்பார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடத்தல்-4 இலங்கை வாலிபர்கள் கைது:
இதற்கிடையே விடுதலைப் புலிகளுக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் கைப்பற்றி அது தொடர்பாக இலங்கை வாலிபர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தொண்டியை அடுத்த உப்பூர் பஸ் நிலையம் அருகே வந்த மாருதி வேனை போலீசார் சோதனையிட்டனர். அதில் ஒரு ஜெனரேட்டர், 3,360 பேட்டரிகள், மிதவை ஜாக்கெட்டுகள், திசை காட்டும் கருவிகள், யு.பி.எஸ்கள், செல்போன்கள், சார்ஜர்கள், டிஷ் ஆண்டெனா, ரிசீவர், சீருடைக்கான சாம்பிள் துணிகள் ஆகியவை இருந்தன.
அந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார் வேனில் இருந்த விஜயநீலன் என்ற நவீன் (26), ரமணன் (32), வக்சநந்தன் என்ற விஜி (25), டிரைவர் சிவராம் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்கள்.
விஜயநீலன் மதுரை அருகே திருவாதவூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தார். மற்ற 3 பேரும் திருச்சியில் தங்கி இருந்தனர். சிவராம் வேன் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார்.
விஜயநீலன் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்றவர். புலிகளுக்கு அவ்வப்போது பொருட்களை அனுப்பி வைத்து வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications