அணு ஒப்பந்தம்-சிஐடியூ மனித சங்கிலி போராட்டம்
செங்கோட்டை: அணு ஒப்பந்தத்தினை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 14 தேதி மனித சங்கிலி போராட்டமும், விலைவாசி உயர்வை கண்டித்து ஆகஸ்ட் 20ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தையும் சிஐடியூ அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சிஐடியூ மாநில செயலாளர் செளந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
முறை சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிமுறையை அமுல்படுத்துவதில் தொழிலாளர் துறை வேகம் காட்ட வேண்டும். நெல்லை மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் பிஎப் பெற தகுதியிருந்தும் முதலாளி வர்க்கத்தால் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அரசின் சலுகைகளை பொதுமக்கள், தொழிலாளர்கள் பெறுவதை தடுக்கும் தீய சக்திகளை கடுமையான சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும். தமிழகத்தில் தொழில் தொடங்கும் புதிய பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சங்கம் அமைக்க தடை விதிக்கின்றன.
இந்திய சட்டத்தில் தொழிற்சங்கங்கள் அமைத்திட உரிமை உள்ளது. அடிப்படை உரி்மைகளை பறிக்கும்போது அது அரசுக்கு எதிரான திட்டமாக மாறி விடுகிறது. இதனை அரசு கண்டிக்க வேண்டும். அதை விடுத்து கண்டு கொள்ளாமல் இருப்பது மறைமுகமாக தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போல் அரசு உள்ளது.
தொழிற்சங்கம் அமைத்திட தொழிற்சாலைகளுக்கு அரசு உத்திரவிட வேண்டும். கடந்த ஒராண்டில் மட்டும் தொழிற்சங்கம் அமைத்த 700 பேர்களை ஹூண்டாய் உள்பட பிரபல நிறுவனங்கள் வேலையிலிருந்து நீங்கியுள்ளது. இது சட்டத்தை மீறும் செயல். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகளை அரசு ஏற்று நடத்திட வேண்டும்.
வரும் 14 தேதி மாலை 5 மணிக்கு அணு ஒப்பந்தத்தினை எதிர்த்து சிஐடியூ சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்.
மேலும் ஆகஸ்ட் 20ம் தேதி ஏஐடியூசி, சிஐடியூ, ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியூ, யூடிவீசி மற்றும் 40 தொழிற்சங்க சம்மேளனம், முறைசாரா தொழிலாளர்கள் உள்பட அனைவரும் இணைந்து விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து பொது வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியம் தொழிலாளர்களுக்கு ரூ.80க்கு பதிலாக ரூ.55 வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து பல இடங்களில் மக்களை திரட்டி போராடி வருகிறோம். நலவாரியம் மூலம் வழங்கப்படும் உதவி தொகையினை பெறுவதற்கு 6 மாதம் ஆகிறது.
இதுகுறித்து அரசிடம் பேசியுள்ளோம். மாவட்ட அளவிலேயே மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உதவித் தொகையை, அதிகப்பட்சம் 3 மாதங்களுக்குள் வங்கிடவும் மாவட்டம் தோறும் நலவாரியத்திற்கு சென்று புதிய அலுவலரையும் அரசு நியமித்துள்ளது. அதனை வரவேற்கிறோம் என்றார்.