மன்மோகன் சிங்குடன் அத்வானி ஆலோசனை
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து உள்நாட்டு பாதுகாப்பு, அமர்நாத் நில மாற்று விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.
பிரதமரின் அழைப்பின் பேரில் நேற்று அத்வானி அவரை சந்தித்தார். பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து நாட்டில் நிலவி வரும் பாதுகாப்பு நிலை குறித்து பிரதமருடன் அத்வானி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரும் உடன் இருந்தனர். அத்வானியுடன் பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லியும் உடன் வந்திருந்தார்.
சந்திப்பின்போது பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், தீவிரவாதிகள் விஷயத்தில் மென்மையாக நடக்கக் கூடாது, கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும், அமர்நாத் நில விவகாரத்தில் சுமூக நிலையை ஏற்படுத்த முயல வேண்டும், அமர்நாத் தேவஸ்தானத்திற்கு வழங்கி பின்னர் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்ட நிலத்தை மீண்டும் கோவிலுக்கே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அத்வானி பிரதமரிடம் தெரிவித்தார்.