சென்னை விமான நிலையம்-மகளிர் கல்லூரிக்கு குண்டு மிரட்டல்
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கும், மின்ட் பகுதியில் உள்ள அரசு பாரதி மகளிர் கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
இதையடுத்து விமான நிலையத்தில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிரட்டலுக்குள்ளான கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. அக்கல்லூரிக்கு அருகில் உள்ள இன்னொரு கல்லூரி மற்றும் பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது.
சென்னை விமான நிலையத்தின் மேலாளர் மாதவ ராவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. அதி்ல் அரசு கேபிள் நிறுவனம் தொடங்கும் முடிவை கைவிடாவிட்டால் ஆகஸ்ட் 2ம் தேதி விமான நிலையத்துக்கு குண்டு வைக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்புப் படையினர், போலீசார் இன்று காலை அவரச ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், எந்த மிரட்டலையும் லேசாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
சூட்கேசால் பரபரப்பு:
இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று சூட்கேசால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலை 2 மணியளவில் விமான நிலையத்தில் அனாதையாக கிடந்த இந்த சூட்கேசில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற பீதி பரவியது
தகவலறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் உடனே விரைந்து வந்து சோதனை செய்தனர்.
சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் சில துணிகளும், ஒரு வாட்ச்சும் இருந்தது.
மகளிர் கல்லூரிக்கு...:
அதே போல முத்தியால்பேட்டை காவல்நிலையத்திற்கு இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பாரதி கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் கல்லூரி முதல்வரை போனில் அழைத்து மாணவிகளை பத்திரமாக வெளியேற்றி விடுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து கல்லூரி மைதானத்திற்கு மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் போலீஸார் மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று கல்லூரி முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இதில் எந்த குண்டும் சிக்கவில்லை. இதையடுத்து அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.
இருப்பினும் மாணவிகளிடையே பீதி நிலவியதால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோல அருகில் உள்ள ஒரு கல்லூரிக்கும், பள்ளிக்கும் கூட இன்று விடுமுறை விடப்பட்டது.












Click it and Unblock the Notifications