சேது திட்டத்தை தாமதப்படுத்த கூடாது-வீரமணி
சென்னை: அரசியல் காரணங்களை காட்டி சேது சமுத்திர திட்டத்தை தாமதப்படுத்த கூடாது. திட்டமிட்டபடி நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கும் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமைகள் குறித்தும் நிலையான முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை இப்போது ஏற்பட்டு உள்ளது.
இலங்கையில் நடக்கும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அந்நாட்டு அதிபருடன் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 4ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.சென்னையில் எனது தலைமையில் போராட்டம் நடக்கும்.
சேது சமுத்திர திட்டத்தை 2009ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும். மாற்றுப் பாதை குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தனது ஆய்வு அறிக்கையை சமர்பிக்க காலக்கெடுவை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அரசியல் காரணம் காட்டி இந்த பெரிய திட்டத்தை தாமதப்படுத்துவது நல்ல தல்ல. தமிழக மக்களுக்கு பொருளாதார வளம் தரும் இத்திட்டத்தை எந்த காரணம் கொண்டும் கைவிடக் கூடாது. திட்டமிட்டபடி இத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றார்.