போன் ஒட்டுகேட்பு: 60 போலீசார் 'டிரான்ஸ்பர்'
சென்னை: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் 60 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் திரிபாதியும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனர் உபாத்யாயாவும் தொலைபேசியில் பேசிக் கொண்ட உரையாடல் பத்திரிகை, டிவியில் வெளியானது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் விசாரிக்க நீதிபதி சண்முகம் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை ஏற்கனவே அரசிடம் தாக்கல் செய்தது.
விசாரணையில் தொலைபேசியை யாரும் ஒட்டுக் கேட்கவில்லை என்பதும், கூடுதல் டிஜிபி உபாத்யாயா தனக்கு வரும் போன் கால்களை கம்ப்யூட்டரில் எப்போதும் பதிவு செய்து வைப்பதும் தெரியவந்தது.
அப்படி பதிவு செய்யப்பட்ட இந்த உரையாடலைத்தான் அங்கிருந்த ஊழியர்களும், போலீசாரும் திருடி வெளியில் கொடுத்திருந்ததும் தெரிய வந்தது.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த நாள் உபாத்யாயா சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவரது அலுவலக பணியாளர்கள் சங்கர், பிரபாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சங்கர் 15 வருடமாக லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் வேலை பார்த்தவர். அவர் மூலம் தான் தொலைபேசி உரையாடல் பதிவு வெளியே சென்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் போலீசார் பட்டியல் எடுக்கப்பட்டது. அவர்களை கூண்டோடு இட மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஊழியர்கள், போலீசார் மொத்தம் 60 பேர் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 31 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.