சுதந்திர தின பாதுகாப்பு: போலீஸ் உஷார்!
சென்னை: சுதந்திர தினம் நெருங்குவதையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பெங்களூர், அகமதாபாத் தொடர் வெடிகுண்டு சம்பவங்களையடுத்து, தமிழகத்திலும் காவல் துறையினர் தீவிரவாதிகளை தேடும் வேட்டையையும், வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்பு நடவடிக்கை களையும் முடுக்கி விட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. இவற்றில் பல மிரட்டல்கள் வெறும் புரளிகள் என்பது தெரிய வந்துள்ள போதிலும், போலீசார் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தீவிர சோதனையை முடுக்கி விட்டுள்ளனர்.
15ந் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையிலும் இந்த சோதனைகள் மும்முரப்படுத்தப் பட்டுள்ளன.
விடிய விடிய லாட்ஜுகளில் சோதனை
நேற்று இரவு சென்னை நகரின் பல்வேறு இடங்களில் வாகன சோதனையும், தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனைகளையும் போலீசார் மேற்கொண்டனர்.
சென்னை நகருக்கு வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வண்ணாரப் பேட்டை, தாம்பரம் ஆகிய இடங்களில் தீவிரமாக சோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டன.
அதேபோல சென்னையிலிருந்து அந்த வழியாக செல்லும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
வாகன சோதனையின்போது, வாகன ஓட்டிகள் அனைவரிடமும் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன. அடையாள அட்டைகள் இல்லாதவர்களை போலீசார் பிடித்துச் சென்று அவர்கள் தங்கியிருக்கும் இடம், வேலை பார்க்கும் இடம் குறித்த தகவல்கள் குறித்து விசாரணை செய்கின்றனர்.
அவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மற்றவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
நகரின் முக்கியப் பகுதிகளான அண்ணாசாலை, புரசைவாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, பாரிமுனை, தி.நகர், நுங்கம்பாக்கம், அடையாறு, திருவான்மியூர் ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதுடன், இந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டனர்.
மண்ணடியில் 3 பேர் சிக்கினர்:
மண்ணடியில் உள்ள தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப் பட்டது. சந்தேகத்துக்கிடமான முறையில் புதிதாக யாரேனும் அந்த விடுதிகளில் தங்கியிருக்கிறார்களா என்று போலீசார் விடுதிகளை சோதனையிட்டு, ஆய்வு செய்தனர்.
மண்ணடியில் சிலர் சந்தேகத்துக்குரிய வகையில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே இந்த தீவிர சோதனை நடைபெறறது.
இந்த சோதனையின்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஹமீத் பக்கிரி, கோவை அப்துல் கயூம், நாகூர் முகம்மது அம்மானி ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications