ராமநாதபுரம்: வெடிபொருட்களுடன் பெண் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் அருகே உள்ள திருப்பாலைக்குடி கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை கண்காணித்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள கிழக்குத் தெருவைச் சேர்ந்த சித்தி என்பது தெரியவந்தது.
அவரை சோதனை செய்தபோது அவரிடம் 50 ஜெலட்டின் குச்சிகள், 48 டெட்டர்னேட்டர்கள், 10 மீட்டர் வயர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து திருப்பாலைக்குடி போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் யார், எதற்காக வெடிபொருட்களுடன் நடமாடினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் இப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்த முயன்றதாக சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும், சித்திக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications