தெற்காசியாவில் தீவிரவாதத்தை ஒழிப்போம் - கொழும்பு பிரகடனம்

கொழும்பில் நடந்த 2 நாள் சார்க் மாநாடு இன்று முடிவடைந்தது. இதன் இறுதியில் பல்வேறு தீர்மானங்கள் அடங்கிய கொழும்பு பிரகடனம் வெளியிடப்பட்டது.
தீர்மான விவரங்கள்:
- தீவிரவாதம் தெற்காசியப் பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக உள்ளது. இதை ஒடுக்க சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும். தீவிரவாதத்தை வேரறுக்க உறுதியான கூட்டு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- சார்க் நாடுகளுக்கிடையே, கைதிகள், குற்றவாளிகள், தீவிரவாதிகளை பகிர்ந்து கொள்ள உரிய சட்டப்பூர்வ வசதி மேற்கொள்ளப்படும்.
- சார்க் அமைப்பின் கொள்கைகளையும், நோக்கங்களையும் உறுதி செய்யும் வகையில் செயல்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர். பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், கலாச்சார மேம்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவது என சார்க் நாடுகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
- கடந்த காலங்களில் சார்க் வளர்ச்சிப் பாதையில் செல்வதை அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் அங்கீகரித்துள்ளனர். இதே வேகத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கவும், எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சார்க் நாடுகளின் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
- மக்கள் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பிராந்திய ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்பதை சார்க் நாடுகளின் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். எனவே அதற்கேற்ற வகையில் செயல்பட சார்க் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். மக்கள் நலனுக்கேற்ற துறைகளை அறிந்து அவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த திட்டத்தை வகுக்குமாறு சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- சார்க் நாடுகளுக்கிடையே, பொருளாதார பிராந்திய தொலைத் தொடர்பு வசதியை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளுக்கிடையே குறைந்த கட்டணத்திலான தொலைத் தொடர்பு வசதி, சார்க் பிராந்தியத்தில் சர்வதேச நேரடி தொலைபேசி வசதி ஆகியவற்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- உயர்ந்து வரும் எரிபொருள் தேவையும், விலை உயர்வும் தெற்காசிய நாடுகளை பெரும் சிரமத்தில் ஆழ்த்தி வருகின்றன. எனவே எரிபொருள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஸ்திரமாக வைத்திருக்க முடியும் என்று சார்க் நாடுகளின் தலைவர்கள் நம்புகின்றனர். எனவே, சூரிய மின் சக்தி, காற்றாலை மின்சாரம் மற்றும் நீர் மின்சாரம் ஆகியவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்க சார்க் நாடுகள் தீர்மானித்துள்ளன. இதுதொடர்பான தொழில்நுட்பங்களை சார்க்நாடுகள் ஒன்றுக்கொன்று பகிர்ந்து கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- தெற்காசியாவில் இயற்கைப் பேரிடர்களால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதை சார்க் நாடுகளின் தலைவர்கள் கவலையுடன் பகிர்ந்து கொண்டனர். இதை தடுக்கும் வகையிலும், பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலும், சார்க் இயற்கைப் பேரிடர் நிர்வாக மையம் ஒன்றை அமைக்கவும், அதன் மூலம் சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு செயலாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- பெருகி வரும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் நீர்த் தேவையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு சார்க் நாடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் அவசியத்தை பிரபலப்படுத்தவும், ஆற்று படுகை நிர்வாகத்தை முறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- வறுமையை ஒழிக்க முன்னுரிமை கொடுத்து செயல்படுவது எனவும், வறுமையை ஒழிக்க உதவும் சிறு கடன் திட்டங்கள் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சார்க் வளர்ச்சி நிதியம்:
- சார்க் வளர்ச்சி நிதியத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் அங்கீகரித்துள்ளன. விரைவில் இது நடைமுறைக்கு வருவதை சார்க் நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். இதுதொடர்பான பணிகள் திருப்திகரமாக நடந்து வருவதாகவும் சார்க் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சார்க் நிதியத்தின் மூலம் மகளிர் மேம்பாடு, சிறார் நலம், ஆசிரியர் பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications