மேற்கு வங்கத்திலும் ரிலையன்ஸ் ஃபிரஷ்!!
கொல்கத்தா: பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மேற்குவங்க மாநிலத்திலும் கால் பதிக்கிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம்.
முதல்கட்டமாக கொல்கத்தா நகரில் மட்டும் 5 பிரம்மாண்ட சூப்பர் ஸ்டோர்களுடன் தனது வணிகத்தைத் துவங்குகிறது.
மக்களின் வரவேற்பு மற்றும் அரசின் ஆதரவைப் பொறுத்து கொல்கத்தாவில் இந்தக் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
இந்த கடைகளில் காய்கறிகள் மற்றும் பழங்களும் விற்பனை செய்யப்படும். இவற்றை விற்பதற்காக கெவன்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை கெவன்டர் நிறுவனம், ரிலையன்ஸ் ப்ரஷ் ஷோரூம்களில் விற்கும். இதற்கான உரிமத்தையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.
உள்ளூரில் விளையும் பழங்கள் காய்கறிகளை இம்மாதிரி பெரிய நிறுவனங்களில் விற்பதை கம்யூனிஸ்டுகள் கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் ஏழை விவசாயிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த எதிர்ப்பு.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கு வங்கத்தில் காலூன்றுவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான பார்வர்டு பிளாக் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று ரிலையன்ஸூக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது அக்கட்சி.












Click it and Unblock the Notifications