ஒலிம்பிக்: ஊக்க மருந்து புகார்-மோனிகா வெளியேற்றம்

இதனால் பெண்கள் பளு தூக்கும் போட்டியில் இந்தியா இடம் பெறுமா என்பது தெரியவில்லை.
ஒலிம்பிக் போட்டி வரும் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கிறது. இதில் 57 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. தடகளம், துப்பாக்கி சுடுதல், நீச்சல், வில் வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், குத்துச்சண்டை, மல்யுத்தம், பளு தூக்குதல், ஜூடோ, துடுப்பு படகு, பாய் மர படகு ஆகிய விளையாட்டுகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது.
பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் இடம் பெற்ற ஒரே பெண் வீராங்கனை மோனிகா தேவி. இவர் 69 கிலோ எடை தூக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், டெல்லியில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளுக்கு முந்தைய ஆரம்பகட்ட போட்டிகளில் இவர் ஊக்க மருந்து உண்டது சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இவர் நேற்றிரவு இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
சீனாவுக்கு விமானம் ஏற சில மணி நேரங்கள் இருந்த நிலையில் அவரை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தியா சார்பில் போட்டியிடும் ஒரே பெண் வீராங்கனை, போட்டி தொடங்க 2 நாட்களே உள்ள நிலையில் நீக்கப்பட்டது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
மோனிகா அழுகை-மறுப்பு:
ஆனால் இந்த குற்றச்சாட்டை மோனிகா மறுத்துள்ளார். இதுகுறித்து மோனிகா கூறியதாவது: இது எப்படி நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை. நான்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. அவற்றின் 2 தேர்வின் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. அதில் எந்த தேர்வில் நான் ஊக்கமருந்து உட்கொண்டதாக கூறுகிறார்கள் என்பதும் தெரியவில்லை. நான் ஊக்க மருந்து எடுத்துக் கொள்ளவே இல்லை. இதில் அரசியல் செய்கிறார்கள். என்னை பலியாக்க நினைக்கின்றனர்.
என்னை பெய்ஜிங்கிற்கு அனுப்பும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மீண்டும் ஊக்கமருந்து சோதனை நடத்தட்டும். ஊக்க மருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டால் அங்கேயே என்னை சுட்டுக் கொல்லலாம். நான் நிரபராதி என்று அழுது கொண்டே கூறினார்.
மோனிகாவுக்கு ஆதரவு:
இதற்கிடையே இந்திய பளுதூக்கும் அமைப்பு மோனிகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சோதனைகளில் தவறுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. சோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளில் மாசு ஏற்பட்டாலும் சோதனையின் முடிவு தவறாக வரும். பரிசோதனை செய்த லேப்பில் தவறு நடத்திருக்கக்கூடும் என்பதை அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம் என்று இந்திய பளுதூக்கும் அமைப்பின் செயலாளர் பல்தேவ் சிங் குலாத்தி கூறியுள்ளார்.
இன்னொரு வீராங்கனை சதி?:
ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள மோனிகா தேவிக்கும், மற்றொரு வீராங்கனை ஷைலஜா பூஜாரிக்கும் கடும் போட்டி நிலவியது. ஏகப்பட்ட சர்ச்சைகளை கடந்து மோனிகா தேர்வானார். இந்த நிலையில் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியுற்று வெளியேற்றப்பட்டுள்ளார் மோனிகா.
கடந்த 2006ம் ஆண்டு தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை மோனிகா வென்றார்.
மோனிகா வெளியேற்றப்பட்டதை அடுத்து வேறு வீராங்கனை அனுப்புவது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஷைலஜா பூஜாரிக்கு வாய்ப்புக் கொடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
லஞ்சம் தந்த பூஜாரி:
ஆனால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தன்னை தேர்வு செய்ய பளுதூக்கும் அமைப்புக்கு அவர் லஞ்சம் கொடுத்ததாக புகார் உள்ளது. இந்தியா சார்பில் பளு தூக்கும் பிரிவில் கலந்து கொள்ளப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications