ஓகேனக்கல் எங்களுக்கே சொந்தம்-கர்நாடக அமைச்சர்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள பல அணைகளும் நிரம்பி வருகின்றன.
இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கூடுதலை நீரை கர்நாடகம் காவிரியில் வெளியேற்றி வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகள் உள்பட கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஹாரங்கி, கபினி ஆகிய அணைகள் நிரம்பிவிட்டன.
ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து இந்த அணைகளில் இருந்து கடந்த 29ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நீர் கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூரை அடைந்தது. இதனால் கடந்த மாதம் 31ம் தேதி 52 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 60.68 அடியாக உயர்ந்தது.
இப்போது அணைக்கு வினாடிக்கு 23,178 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
ஓகேனக்கல் எங்களுக்கே சொந்தம்-கர்நாடகம்:
இதற்கிடையில் ஓகேனக்கல் பகுதி முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்று கர்நாடக எரிசக்தித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதுபற்றி எதுவும் கூற முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் இரு மாநில முதல்வர்களையும் அழைத்து மத்திய அரசு பேச வேண்டும்.
இந்த விவகாரத்தில் கர்நாடகாவின் நலனை ஒருபோதும் விட்டுத்தர முடியாது. ஓகேனக்கல் விவகாரத்தை பொறுத்த வரையில் அந்த பகுதி எங்களுக்கே சொந்தம். ஓகேனக்கல் பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பலர் கன்னட மொழியைத்தான் பேசுகின்றனர்.
கர்நாடக அரசின் ரேஷன்கார்டுகளைத்தான் வைத்துள்ளனர். கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கர்நாடக மாநிலத்துக்குத்தான் சொந்தம். இதில் எந்த பிரச்சனையும் இல்லை.
கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமான இடத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications