மதுரை வளர்ச்சியி்ல் பிடிஆர்-கருணாநிதி புகழாரம்
மதுரை: மதுரையின் வளர்ச்சியில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மிகப் பெரும் பங்காற்றினார் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் செலவில் அவரது உருவச் சிலை பாண்டியன் ஹோட்டலின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை திறப்பு விழா இன்று காலை மதுரையில் நடைபெற்றது.
நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் மு.க.அழகிரி முன்னிலை வகித்தார். பழனிவேல்ராஜனின் சகோதரர் கமல தியாகராஜன் வரவேற்புரையாற்றினார்.
பழனிவேல் ராஜனின் சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில்.
பி.டி.ஆர். குடும்பம் மிகவும் பாரம்பரியமிக்கது. பழனிவேல் ராஜனின் தந்தை பி.டி.ராஜன் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு நீதிக்கட்சி மாநாட்டில் நிறைவேற்றிய பெண்களுக்கும் பரம்பரை சொத்தில் பங்கு என்ற தீர்மானத்தை 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் சட்டமாக கொண்டு வந்தோம்.
பழனிவேல் ராஜனின் எண்ணங்களும், செயல்பாடுகளும் மாற்றுக் கட்சியினரும் போற்றும் வகையில் அமைந்திருந்தன. பழனிவேல் ராஜனின் மறைவு அவரது குடும்பத்தினரை விட என்னை மிகவும் பாதித்து விட்ட ஒன்றாகும்.
சென்னையிலேயே மருத்துவ சிகிச்சை பெறுங்கள் என்று நான் கூறிய அறிவுரையை புறந்தள்ளி விட்டு மதுரையை நோக்கி வந்தார். அந்த பயணமே திரும்பா பயணமாகி விட்டது.
மதுரையின் வளர்ச்சியில் பி.டி.ஆரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மதுரை ரிங் ரோடு அமைக்கப்பட அவர்தான் காரணமாக இருந்தார். அவருடைய சிலையை திறந்து வைப்பதில் நான் பெருமை அடைகிறேன். அவர் சிலையாக இருந்தாலும் எல்லோரது நெஞ்சத்தில் எல்லாம் நிறைந்திருக்கிறார் என்றார்.
நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு இன்று முதல்வர் தலைமையில் மதுரையில் பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழாவை நடத்துபவர் அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாநகராட்சி தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்றிரவு மதுரை வந்தார்.
அவருக்கு ரயில் நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக மனு-நீதிமன்றம் நோட்டீஸ்:
முன்னதாக பழனிவேல்ராஜன் சிலை திறப்பு, டிஎம்.சவுந்தரராஜன் பாராட்டு விழா ஆகியவற்றுக்கு தடை விதிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் கே.ஜெயவேல் தாக்கல் செய்த பொதுநல மனுவி்ல்,
இந்த விழாக்களுக்காக போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அலங்கார வளைவுகளையும், பிளக்ஸ் போர்டுகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும்.
இந்த விழாக்களுக்கு அதிகாரிகள் வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எலிப் தர்மாராவ், சுப்பையா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசியல் உள் நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி விழாவுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய மறுத்து விட்டனர்.
அதே நேரத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக உள்ளாட்சி நிர்வாகத்துறை செயலாளர், மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications