செம்மொழி: தெலுங்கு-கன்னட கமிட்டிக்கு எதிராக வழக்கு
சென்னை: தெலுங்கு, கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கமிட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட்டதையடுத்து கன்னடத்துக்கும் அந்த அந்தஸ்து தரப்பட வேண்டும் என கர்நாடகத்தில் போர்க் குரல் எழுந்துள்ளது. இதையடுத்து ஆந்திராவிலும் தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து கோரப்பட்டு வருகிறது.
இதையடுத்து இது குறித்து ஆராய இரு கமிட்டிகளை மத்திய அரசு நியமித்தது. அதில் கர்நாடகத்தைச் சேர்ந்த இருவரும், ஆந்திரத்தைச் சேர்ந்த இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் காந்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
இந்த இரு மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களில் மொழியியல் அறிஞர்கள் யாரும் இல்லை. வெறும் மொழிப் பற்று, பிறரது நெருக்குதல், மிரட்டல்கள் ஆகியவற்றுக்கு அடிபணியாமல் இவர்களால் சுயமாக முடிவெடுக்க முடியாது.
இந்த கமிட்டியில் உள்ளவர்களை வைத்துக் கொண்டு, உண்மையிலேயே இந்த இரு மொழிகளும் செம்மொழி அந்தஸ்துக்கு உரியவை தானா, செம்மொழி அந்தஸ்துக்கு உரிய எல்லா தகுதிகளும் அந்த மொழிகளில் உள்ளனவா என்பதை முறையாக ஆராய முடியாது.
தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் செம்மொழி அந்தஸ்து தருவது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டிகளி்ல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சர்வதேச அளவில் உள்ள அங்கீகாரத்தின் அடிப்படையில் தான், அவற்றுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், தெலுங்கு-கன்னடத்துக்காக அமைக்கப்பட்ட கமிட்டிகளில் உள்ளவர்கள் ஆந்திரா, கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். செம்மொழி அந்தஸ்துக்கு பரிந்துரைக்க வேண்டும் என இவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இதனால் செம்மொழி அந்தஸ்து தரலாம் என்பதைத் தவிர வேறு எதையும் இவர்களால் பரிந்துரைக்கவே முடியாது.
உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளை இந்தக் கமிட்டிகளின் தலைவராக நியமித்தால் தான் அவை சுயமாக செயல்பட முடியும்.
எனவே இதில் நீதிமன்றம் தலையிட்டு முறையான அறிஞர்கள் கொண்ட கமிட்டிகளை அமைக்க வேண்டும். இப்போதுள்ள கமிட்டிகளின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசுக்கும் சாகித்ய அகாடமி அமைப்புக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் காந்தி.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கூலி, நீதிபதி இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், இது தொடர்பாக 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசின் வழக்கறிஞர் துணை சொலிசிட்டர் ஜெனரல் வில்சனுக்கும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications