சென்னையில் ஒரே மாதத்தில் 25 கொலைகள்- ஜெ
சென்னை: சென்னை நகரில் ஒரே மாதத்தில் 25க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் சென்னை நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை நகரின் மையப் பகுதிகளில் மர்மக் கொலைகள் தொடர்ந்து வருகின்றன. ஒரே மாதத்தில் 25க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் சென்னை நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கொலைகளுக்கு காரணமானவர்களை காவல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. குற்றவாளியைப் பார்த்ததாகக் கூறியவர்களை காவல் துறையினர் கைது செய்வதால், தற்போது காவல் துறைக்கு தகவல் கொடுப்பதற்குக் கூட பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்தப் பகுதிகளில் இரவுக் காவலாளிகளாக பணியாற்றியவர்கள், பயம் காரணமாக தங்கள் வேலைகளை ராஜினாமா செய்துள்ளனர். இரவு நேர காவலாளிகளாக வேலை பார்ப்பதற்கு ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது.
காவல் துறையின் புலனாய்வில், குற்றவாளியைப் பற்றி இதுவரை எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. காவல்துறை என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா என்று பொதுமக்கள் சந்தேகப்படும் அளவுக்கு காவல் துறையின் போக்கு உள்ளது.
இதைப் பற்றியெல்லாம் முதல்வர் கருணாநிதி கவலைப்படாமல் உள்ளார்.
சென்னை நகரில் நிகழ்ந்து வரும் மர்மக் கொலைகளுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க முடியாத தமிழக அரசை கண்டித்து, நாளை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications