கச்சத்தீவை மீட்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெ. வழக்கு
டெல்லி: கச்சத்தீவை மீண்டும் திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வழக்கு தொடர்ந்தார்.
கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவேன் என சமீபத்தில் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ், கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமைகளை திரும்பப் பெறவும், இந்திய படகுகள், கச்சத்தீவில் நுழையவும், அங்கு மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் உரிமைகளை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
கச்சத்தீவு தொடர்பாக 1974ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி இந்திய, இலங்கை அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அது செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடித்து வந்தனர். அந்தத் தீவை தங்களது வாழியல் இடமாக இரு நாட்டு மீனவர்களும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அந்த தீவை தங்களது நாட்டுக்குச் சொந்தமானது என்று
இலங்கை கூறி வருகிறது.
ஆனால் பூகோளப்படியும், வரலாற்று ரீதியிலும் கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது.
எனவே கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.